தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

By

Published : Nov 22, 2021, 4:51 PM IST

தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு ()

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களை கொள்ளையடித்து சென்றது. இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக கனகராஜ், சயான் உள்ளிட்ட 11 பேரை காவல் துறையினர் சந்தேகித்தனர். அதில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வாளையாறு மனோஜ் தவிர மற்றவர்கள் பிணையில் உள்ளனர். இந்நிலையில், காவல் துறையினர் சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறுவிசாரணை மேற்கொண்டனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்தனர்.

தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்ட இருவரும் சாட்சியங்களை கலைத்ததாக தெரியவந்தது. இருவரையும் காவல் துறையினர் 15 நாள்கள் காவல் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில், இருவரின் நீதிமன்ற காவல் இன்று (நவ.22) மாலையுடன் முடிவடைய இருப்பதை அடுத்து உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் காவல் துறையினர் முன்னிறுத்தினர். இருவருக்கும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரையும் பாதுகாப்புடன் கூடலூர் கிளை சிறைக்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர். இவர்கள் இருவருக்கும் பிணை கோரிய மனுவும் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா வழக்கை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:பேருந்தை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details