தமிழ்நாடு

tamil nadu

அரசியலில் நம்மை எதிர்த்து விளையாடுகின்ற தகுதி தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அரசியலில் யாருக்கும் இல்லை - ஓபிஎஸ்

By

Published : Jun 7, 2023, 10:29 PM IST

Updated : Jun 7, 2023, 11:06 PM IST

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கொண்டு வருவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவுடன் கைகோர்த்து செயல்பட தொடங்கி விட்டது என தஞ்சையில் திருமண விழாவில் பங்குபெற்ற டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அருகே திமுக கவுன்சிலர் மகள் சடலமாக மீட்பு… கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை!
தருமபுரி அருகே திமுக கவுன்சிலர் மகள் சடலமாக மீட்பு… கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை!

வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன்

தஞ்சாவூர்: ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் சண்முகப்பிரபு, யாழினிக்கு மாலை கொடுத்து மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இத்திருமண விழாவில் பங்குபெற்ற டிடிவி தினகரன் திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் ஆதிக்க மனப்பான்மையால், பேராசையால், கனத்த இதயத்தோடு நாங்கள் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம்.

அம்மாவின் லட்சியங்களை தொடர்ந்து, வருகின்ற தலைமுறைக்கு எடுத்து செல்வது தலையாய பணி. அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகள் கழித்து அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஒரே மேடையில் சந்திப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்றைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இந்த சந்தர்ப்பத்தில் பழைய நண்பர்களை உறவினர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது தான்.

அம்மாவின் தொண்டர்களாக அம்மாவின் நிர்வாகிகளாக 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் ஒரு சிலரின் சுயநலத்தால், பண திமிரால் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களுக்குள் இருந்த வருத்தங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் உண்மையான ஆட்சி, அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற நானும் நண்பர் ஓபிஎஸ் அவர்களும் கைகோர்த்து இருக்கிறோம். என்றும், ஏதோ விதிவசத்தால் காலத்தின் கட்டாயத்தால் அரசியலைத் தாண்டி எங்களுக்குள் இருந்த அன்பும் நட்பும் என்றென்றும் தொடர்ந்து வந்தது.

அதனால்தான் மீண்டும் இணைந்து பணியாற்றுவது, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அம்மாவின் லட்சியங்களை தொடர்ந்து கொண்டு செல்வதற்கும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்காகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் இணைந்து கைகோர்த்து செயல்பட தொடங்கி விட்டது. அதன் நல்ல தொடக்கமாகத்தான் இந்த திருமண விழா அமைந்திருக்கிறது.

இது ஒரு இயற்கையாக நிகழ்ந்த இணைப்பு தான், இந்த இணைப்பு வருங்காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்டி தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி உண்மையான அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நட்புடன் எந்த ஒரு மனமாச்சர்யங்களுக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாக செயல்படுவோம்” என்று உறுதி தெரிவித்தார்.

பின்னர் விழாவில் பேசிய ஓபிஎஸ், “இன்றைக்கு 7ஆம் தேதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிடித்தமான நாள். இன்றைக்கு ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள் இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில், இவ்வளவு பெரிய மாபெரும் இயக்கத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் தஞ்சை தரணியில் சோழமண்டலத்தில் நாமெல்லாம் ஒன்றாகக் கூடி மணமக்களை வாழ்த்துகின்றது ஒரு நல்ல வாய்ப்பு.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாகத்தான் அதிமுகவை தோற்றுவித்தார்கள். இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பது நமக்கு பெருமை என்ற நிலையை அம்மா உருவாக்கி சென்றுள்ளார். பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் 50 ஆண்டுகாலம் புரட்சித் தலைவர் இயற்றிய சட்ட விதி, அம்மாவின் தலைமை இவைகளுக்கெல்லாம் ஊறு ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த சூழலில் பல்வேறு எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், நாம் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் அனைவரும் எண்ணங்களில் அனைவரும் ஒற்றுமையோடு ஒருசேர இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்காக புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவி அம்மாவும் செயல்பட்டு வந்தார்கள். இன்றைக்கு அது மாறுபட்டு இருக்கிறது. மீண்டும் அந்த சூழ்நிலை வராதா? என்று தமிழகத்தில் உள்ள அத்தனை மக்களும் ஜாதி மத வித்தியாசம் இன்றி ஒருங்கிணைங்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

அந்த எண்ணங்களின் வெளிப்பாடு தான் இன்றைக்கு தஞ்சையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தஞ்சை தரணியில் இருந்து ஆரம்பிக்கும் போது அது முழுமையாக வெற்றி அடையும் என்பது நம்பிக்கை உள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

இதைப்போல அனைவரும் நாம் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடுகின்ற போது நம்மை எதிர்த்து நின்று விளையாடுகின்ற தகுதி தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அரசியலில் யாருக்கும் இல்லை என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இத்திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிஆர் சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கொஞ்சம் நியூஸ் பேப்பர் படிங்க.. பீகாரை திரும்பி பாருங்க சார்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

Last Updated : Jun 7, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details