தமிழ்நாடு

tamil nadu

சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் மரணம்

By

Published : Dec 1, 2022, 10:50 PM IST

சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் மரணம்

கோயில் தரிசனத்திற்குச் சென்ற பிரபல சினிமா தாயாரிப்பாளர் கே. முரளிதரன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர்: லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமா விநியோகம் ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் கே.முரளிதரன் (65). இவர் கடந்த 1994ஆம் ஆண்டு சரத்குமாரை வைத்து அரண்மனை காவலன் மூலம் சினிமா தயாரிப்பை தொடங்கினார்.

அதன்பின் விஜய், அஜித், கமல், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், ஜெயம்ரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை கொண்டு கோகுலத்தில் சீதை, பிரியமுடன், வீரம் விளைஞ்ச மண்ணு, உன்னை தேடி, ஒருவன், உனக்காக எல்லாம் உனக்காக, பகவதி, அன்பே சிவம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சிலம்பாட்டம், சகலகலா வல்லவன், அப்பாடக்கர் என பல வெற்றி படங்கள் உட்பட தமிழ் சினிமாவில் கடந்த 28 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட படங்களை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இவருக்கு கோகுல் மற்றும் ஸ்ரீவத்சன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் கோகுல் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் ஸ்ரீவத்சன் மருத்துவராக சேவையாற்றி வருகிறார்.

இவர் வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒரு முறை கும்பகோணம் பகுதியில் உள்ள முக்கிய கோயில்களை தரிசனம் செய்யது வழக்கம். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வரமுடியாத சூழலில் நேற்று முன்தினம் (நவ.29) இரவு தனது மனைவி உத்ராவுடன் (60), கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்கி விட்டு நேற்று கோனேரிராஜபுரம் நடராஜர், திருநள்ளார் சனிபகவான், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன், ஒப்பிலியப்பன்கோயில் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமியையும் தரிசித்தனர்.

பின்னர் இன்று (டிச.01) காலை 2ஆவது நாளாக காலை ஆலங்குடி குரு ஸ்தலம், கல்கருட ஸ்தலமான நாச்சியார்கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய படிகட்டில் ஏறும் போது அவருக்கு திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவருக்கு நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வந்ததால், பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறித்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை கும்பகோணம் அன்பு (தனியார்) மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் முரளிதரனை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரது உடலை சென்னைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை கொண்டு செல்லப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய கும்பகோணத்திற்கு வருகை தந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details