தமிழ்நாடு

tamil nadu

அண்ணன் மகன்களை காப்பாற்றிய ராணுவ வீரர்; மனைவியின் கண் முன்னே ஆற்றில் மூழ்கி பலி

By

Published : Jul 3, 2023, 2:50 PM IST

கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கிய அண்ணன் மகன்களைக் காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் மனைவியின் கண்முன்னே பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

army soldier drowned in the kollidam river and died after saving his brother sons from drowning in Thanjavur
நீரில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்றி விட்டு கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்த ராணுவ வீரர்

நீரில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்றி விட்டு கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்த ராணுவ வீரர்

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் அடைக்கலசாமி. இவருடைய மகன் ஆரோன் இளையராஜா (38), இவருடைய மனைவி சுகன்யா. ஆரோன் இளையராஜா திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலியனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து ஆரோன் இளையராஜா நேற்று (ஜூலை 02) மதியம் தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

ஆற்றில் கணவர் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா கதறி அழுதுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடினர். பின்னர் நீரில் மூழ்கிய ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டு ஆற்றின் கரைக்கு கொண்டு வந்த போது, அவரது மனைவி கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதது அங்கிருந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்றி விட்டு, ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரோன் இளையராஜா உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆரோன் இளையராஜா தகனம் செய்யும் முன்பு ராணுவ வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: Tomato price hike: திருச்சியிலும் சதம் அடித்த தக்காளி விலை!

ABOUT THE AUTHOR

...view details