தமிழ்நாடு

tamil nadu

கடையம் அருகே கந்துவட்டி கொடுமை! வட்டி கொடுக்காததால் வீட்டை பூட்டிய கொடூரம்..

By

Published : Jun 24, 2023, 5:27 PM IST

கடையம் அருகே வட்டி கொடுக்காத தம்பதியருக்கு வீடு எதற்கு என வீட்டை பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையம் அருகே வட்டி கொடுக்காத தம்பதியரின் வீட்டை பூட்டிய சம்பவத்தால் பரபரப்பு
கடையம் அருகே வட்டி கொடுக்காத தம்பதியரின் வீட்டை பூட்டிய சம்பவத்தால் பரபரப்பு

தென்காசி: கடையம் அருகே அருணாசலம்பட்டியை சேர்ந்தவர் ரவி - சங்கீதா தம்பதியினர். இவர்கள் கடையம் அருகே செக்கடியூரை சேர்ந்த மாலா என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் வட்டி கொடுக்காததை தொடர்ந்து, அவர்கள் வீட்டை பூட்டி மாலா அராஜகம் செய்துள்ளார். இதனால் மாலா என்பவர் மீது கடையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தம்பதியினர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சம்பந்தப்பட்ட மாலா என்பவரிடம் தினசரி வட்டி 300 என்ற கணக்கில் ரூபாய் 10,000 வாங்கியுள்ளனர். தொடர்ந்து ஒரு வருட காலமாக தினசரி ரூபாய் 300 என்ற கணக்கில் வட்டியை கொடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா காலம் வரவே இவர்களால் வட்டியை சரிவர கொடுக்க முடியவில்லை. மேலும் பல்வேறு கடன் பிரச்னை காரணமாக இந்த தம்பதி, தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று விட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இவர்கள் வந்ததை அறிந்த மாலா, அவர்கள் வீட்டிற்குச் சென்று தனக்கு இரண்டு வருடமாக வட்டி கொடுக்கவில்லை என்றும் அதை மொத்தமாக தர வேண்டும் என்றும் தராத வட்டிக்கும் ஒரு வட்டி தர வேண்டும் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

மேலும் கடன் வாங்கிய தம்பதியர் மாலாவின் மிரட்டல் பேச்சை தொடர்ந்து ஐந்து மாதமாக வட்டி பணத்தை கொடுத்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த நான்கு மாதமாக இவர்களால் வட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற மாலா, மேற்படி தம்பதியர் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி, பல்வேறு மிரட்டல்கள் விடுத்ததுடன், வட்டி கொடுக்க முடியாத உனக்கு வீடு எதற்கு எனக் கூறி தான் கொண்டு வந்த பூட்டால் வீட்டை பூட்டிவிட்டு மாலா சென்றுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதா மூலமாக 100 என்ற எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவிக்கவே, கடையம் போலீசார் வந்து வீட்டை பூட்டி சென்ற மாலாவிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்து விட்டனர். மேலும் இது சம்பந்தமாக மாலா மீது கடையம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் கொடுத்து இதுவரையில் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது, கந்து வட்டிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகிறார்களோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வண்ணம் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:''சாதிப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை'' - அமைச்சர் சேகர்பாபு உறுதி!

ABOUT THE AUTHOR

...view details