தமிழ்நாடு

tamil nadu

தென்காசி காதல் விவகாரம் - செங்கோட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்த இளம்பெண்

By

Published : Feb 12, 2023, 5:02 PM IST

Etv Bharat
Etv Bharat

தென்காசியில் காதலி கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவை 3 நாட்களுக்குப் பிறகு இன்று செங்கோட்டை நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.

செங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்த கிருத்திகா

தென்காசி: இலஞ்சி அருகேவுள்ள கொட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த வினித் - கிருத்திகா என்ற காதல் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கிருத்திகாவை அவரது குடும்பத்தார் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணையின்போது ஆஜரான கிருத்திகாவை 2 நாட்கள், தென்காசி அருகே உள்ள நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து, மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், 3 நாட்கள் தற்போது ஆகியுள்ள சூழலில், இன்று செங்கோட்டை நீதிமன்ற நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்னிலையில் கிருத்திகாவை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். மதியம் 1 மணிக்கு நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்பு கிருத்திகாவை, சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற அறையில் வைத்து கிருத்திகாவிடம் செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ரகசிய வாக்குமூலத்தின்போது கிருத்திகா தனது பல்வேறு கருத்துகளை நீதித்துறை நடுவர் முன்பு கூறியதாக கூறப்படுகிறது. ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்பாக நீதிமன்றத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், காவல் துறையினரும் வெளியேற்றப்பட்டனர். நீதித்துறை நடுவர் கிருத்திகாவிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வருகின்ற திங்கட்கிழமை அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்வர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிருத்திகா அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் பாம்பு:நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தின் மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்தைக் கண்ட அங்கிருந்தவர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பாம்பை பிடிக்க முற்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் புகுந்த பாம்பு

அப்போது, மேற்கூரையிலிருந்து கீழே தாவிய பாம்பு, நீதிமன்ற வாளாகத்திற்குள் அங்குமிங்கும் சென்றது. பின்னர், அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனத்திற்குள் புகுந்தது. பல மணி நேரப் போராடி, அந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

இதையும் படிங்க:காதலித்து ஏமாற்றியதாக வேலூர் இளைஞர் மீது கோவா இளம்பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details