தமிழ்நாடு

tamil nadu

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Dec 16, 2020, 9:38 PM IST

தென்காசி: ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுநரை வெட்டி படு கொலை செய்த குற்றாவளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை
ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை

தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் இசக்கித்துரை(37). இவரது மனைவி சொர்ணமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று (டிச.15) மாலை இசக்கிதுரை வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவரது வீட்டிற்கு வந்து சவாரிக்கு அழைத்தார். பின்னர், ஆட்டோவில் ஊத்துமலை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் இசக்கிதுரையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துமலை காவல் துறையினர், இசக்கிதுரையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் இசக்கிதுரை சவாரிக்கு போய்விட்டு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது ஆட்டோவின் எல்இடி விளக்கு வெளிச்சம் அதிகமாக உள்ளது என்று கூறி சண்முகராஜ், இசக்கிதுரையிடம் தகராறு செய்தார்.

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக நேற்று இசக்கிதுரையை, சண்முகராஜ் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இன்று (டிச.16) இசக்கிதுரையின் உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி ரெட்டியார்பட்டி ஊத்துமலை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதத்தால் மூதாட்டியை கொலைசெய்த மூவருக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details