தமிழ்நாடு

tamil nadu

ஏரி, குளங்கள், கால்வாய்கள் 10 நாள்களில் தூர்வாரப்படும் - கே.என். நேரு

By

Published : Sep 21, 2021, 8:22 AM IST

கே என் நேரு  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  தூர்வாரும் பணி  பாதாள சாக்கடை திட்டம்  ஸ்மார்ட் சிட்டி திட்டம்  முறைகேடு  சேலம் செய்திகள்  smart city project  nehru  kn nehru  minister kn nehru  dredging  digging

தமிழ்நாட்டிலுள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் 10 நாள்களில் தூர்வாரப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சேலம் சீலாவாரி ஏரியில் தூர்வாரும் பணியினை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று (செப். 20) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் நகருக்குள் வனம் திட்டத்தினையும் அவர் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்து அவர் பேசியதாவது, “தமிழ்நாடு முழுவதும் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கவும், ஏரிகளைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்றுமுதல் 10 நாள்களுக்கு மழைநீர் வடிகால் சரி செய்யும் பணி, ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.

மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை

இதற்காக 9,097 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 97 ஆயிரத்து 550 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்பார்வை செய்வதற்காக 4,623 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 500 குளங்கள் உள்ளன. இதில் 200 குளங்களை நடப்பாண்டில் தூர்வாரி மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணியினை ஆய்வுசெய்த கே.என். நேரு

மாநில அளவில், சாலைகளைச் சரிசெய்வது, நிலத்தடி நீரைச் சீரமைப்பது, திடக்கழிவு மேலாண்மையைத் துரிதப்படுத்துவது, புதிய கழிவறைகள் கட்டுவது, பழைய கழிவறைகளைச் சீர் செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் விரைவாகச் செய்துவருகிறோம்.

தூர்வாரும் பணி

சேலம் மாநகராட்சியில் நகருக்குள் வனம் திட்டத்தின்கீழ், மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். தமிழ்நாடு முழுவதும் புதிய சந்தைகள், பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும்.

சென்னையில் பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. கழிவுநீர் நீர்நிலைகளில் கலக்காமல் அதனை மறுசுழற்சி செய்யும் பணியை சென்னையில் தொடங்கியுள்ளோம்.

இதனைப் படிப்படியாகத் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தி நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் வகையில், கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படும்.

சீர்மிகு நகரம் திட்டத்தில் முறைகேடு

பாதாள சாக்கடைத் திட்டத்தினைச் செயல்படுத்துவது குறித்து கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும். பாதாள சாக்கடைத் திட்டம், சீர்மிகு நகரம் திட்டத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் புதியதாக ஆறு மாநகராட்சிகள், 29 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை சீராக இருக்கும் வகையில், வார்டு மறு வரையறை செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மறுவரையறை பணிகள் நிறைவு பெற்றவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்று லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை 58 ஆகவும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை 80 ஆகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி

ABOUT THE AUTHOR

...view details