ராமநாதபுரம்: ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து இலங்கைக்குத் தொடர்ந்து கடல் அட்டை, சமையல் மஞ்சள், புகையிலை உள்ளிட்டப் பொருள்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக இந்திய கடற்படை, வனத்துறையினர், சுங்கத் துறை, கடலோரக் காவல் படை அவ்வப்போது தேடுதல் பணி நடத்தி வருபவர்.
இந்நிலையில் நேற்று (அக்.19) மண்டபம் இந்திய கடற்படை கமாண்டன்ட் ஷானோவாஸ், துணை கமாண்டன்ட் மூர்த்தி மற்றும் மண்டபம் வனத்துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீவிர தேடுதல் பணி, பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நடந்தது.
கடல் அட்டை கொள்ளை
அப்போது, கடலில் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுப்படகு ஒன்றைப் பார்த்து, அதில் ஆய்வு செய்தபோது 500 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர், இந்திய கடற்படையினர் கரைக்கு எடுத்து வந்தனர்.
பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்படை, வனத்துறை பார்த்தவுடன் கடத்தல்காரர்கள் கடலில் குதித்து, தப்பி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய அக்ஷரா ரெட்டி?