ETV Bharat / state

பாதி எரிந்த நிலையில் கிடந்த காங்., நிர்வாகி ஜெயக்குமார் சடலம்.. பரபரப்பை கிளப்பும் புகார் கடிதம்.. நெல்லையில் நடந்தது என்ன? - Nellai Congress leader Jayakumar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 12:17 PM IST

ஜெயக்குமார் மற்றும் புகார் கடிதம்
ஜெயக்குமார் மற்றும் புகார் கடிதம் (image credit - ETV Bharat Tamil Nadu)

Tirunelveli congress leader jayakumar: திருநெல்வேலியில் இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல் போன, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேவி தங்கபாலு, ரூபி மனோகரன் எம்எல்ஏ உள்ளிட்ட 6 பேர் பெயர்களை குறிப்பிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கடிதம் அளித்திருந்தார்.

ஜெயக்குமார் சடலம் கிடந்த காட்சி (ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் இரண்டு தினங்களாக காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று அவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாநகர மாவட்டம் - கிழக்கு மாவட்டம் இரண்டு பிரிவு உள்ளது. இதில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். இவர் திசையன்விளை அடுத்த கரைச்சுற்றுப்புதூரில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து உவரி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாகத் தேடினர். அவரது செல்போன் நம்பரை வைத்து அவரது இருப்பிடத்தை கண்காணித்தனர். இது குறித்து கருத்தையா ஜெப்ரின், "தனது புகார் மனுவில் தந்தைக்கு கடன் பிரச்னை இருப்பதாகவும்; அதேபோல், பலர் தனது தந்தையிடம் கடன் பெற்று ஏமாற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடன் விவகாரத்தில், பலர் தனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும்" புகாரில் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஜெயக்குமாரே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்திருந்தார். அதில் அவர் "சமீப காலமாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இரவு நேரங்களில் எனது வீட்டு முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆள்நடமாமாட்டம் இருக்கிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் கீழ்க்கண்ட நபர்கள் தான் பொறுப்பு எனக்கூறி தற்போதைய நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் எம்எல்ஏ, கேவி.தங்கபாலு பெயர் உட்பட ஆறு பேரின் பெயர்களை" மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "ரூபி மனோகரன் தனக்கு பல காரியங்களை செய்து தருவதாக கூறி சுமார் ரூ.70 லட்சம் பணம் பெற்றதாகவும், தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கூறியதால் ரூ.8 லட்சம் செலவு செய்தேன். அந்த பணத்தையும் திரும்ப தரவில்லை. மேலும், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கேவி.தங்கபாலு தேர்தலில் செலவு செய்ய சொன்னார். ரூ.11 லட்சம் செலவு செய்தேன். அந்த பணத்தை ரூபி மனோகரனிடம் கேட்கச் சொன்னார். ஆனால், கேட்டதற்கு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, நெல்லை மாவட்ட காங்கிரஸில் கடும் உள்கட்சிப் பூசல் நிலவுகிறது. குறிப்பாக, ஜெயக்குமார் பொறுப்பு வகிக்கும் கிழக்கு மாவட்டத்தில் மாவட்டத்தில் தொடங்கி கீழ்மட்டம் வரை அனைத்து நிர்வாகிகள் இடையேயும் உள்கட்சி பூசல் நிலவுகிறது. இதில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஒரு பிரிவாகவும்; மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தரப்பினர் ஒரு பிரிவினராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சுட்டிக்காட்டிய நபர்களில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கேவி.தங்கபாலு பெயர்களை ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் வாயிலாக அனுப்பியதாக கூறப்படும் கடிதம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் வாயிலாக அனுப்பியதாக கூறப்படும் கடிதம் (Credit - ETV Bharat Tamil Nadu)

எனவே, ஜெயக்குமார் கடன் மற்றும் கொலை மிரட்டல் பிரச்சனை காரணமாக தானாகவே வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டாரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக மர்ம நபர்கள் யாரேனும் அவரைக் கடத்தி வைத்திருந்தார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கரைச்சுத்துப்புதூர் அருகே உள்ள தோட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமார் சடலத்தை மீட்ட போலீசார் அவரது உயிரிழப்புக்கு என்ன காரணம்? என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக, பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதால் யாரேனும் அவரை தீ வைத்து எரித்தார்களா? அல்லது அவரே கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். முடுக்கி விட்டுள்ளனர். நெல்லையில் பிரபல தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் காணாமல் போன இரண்டு நாட்களில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகார் தொடர்பாக ஈடிவி பாரத் நெல்லை செய்தியாளர் மணிகண்டன் தொலைபேசி வாயிலாக கேட்ட கேள்விக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், 'இதுவரை அப்படி எந்த புகாரும் என்னிடம் வரவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அழுகிய நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு; கொலையா? தற்கொலையா? என விசாரணை..சேலம் அருகே பரபரப்பு! - 3 Dead Bodies Recovered

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.