தமிழ்நாடு

tamil nadu

இந்தாண்டு அகழாய்வு பணிகள் எங்கெங்கே..? தமிழக தொல்லியல் துறை அறிவிப்பு என்ன?

By

Published : Feb 14, 2023, 10:15 PM IST

தமிழகத்தில் நடைபெறும் 2023-ஆம் ஆண்டுக்கான தொல்லியல் கள ஆய்வு இடங்களை தமிழக தொல்லியல் துறை எப்போது அறிவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் அனுமதி அளித்த பிறகும் தமிழகத்தில் அகழாய்வுப் பணிகள் துவங்கவில்லை என தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tamil Nadu Archeology Department field survey locations for the excavation work in 2023 announce
இந்தாண்டு அகழாய்வு பணிகள் எங்கெங்கே..? தமிழக தொல்லியல் துறை அறிவிப்பு என்ன..?

இந்தாண்டு அகழாய்வு பணிகள் எங்கெங்கே..? தமிழக தொல்லியல் துறை அறிவிப்பு என்ன..?

மதுரை: ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அகழாய்வுக் கள இடங்களுக்கு தமிழக தொல்லியல் துறையின் சார்பாக அனுமதி கோரப்பட்டது. இதற்கு மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம், கீழடி உட்பட, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூர், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நமண்டி, தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் ஆகியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் கீழடி, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றில் தொடர் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு பட்டறைப் பெரும்புதூரில் இந்த ஆண்டு அகழாய்வு தொடங்குகிறது. பொற்பனைக்கோட்டை, பூதிநத்தம், கீழ் நமண்டி ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு அகழாய்வுப் பணிகள் துவங்குகின்றன.

பிப்ரவரி மாதமே அகழாய்வுப் பணிகள் துவங்கலாம் என மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் ஒப்புதல் வழங்கிய பின்னரும்கூட, தமிழக தொல்லியல் துறை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நடைபெற உள்ள அகழாய்வுப் பணிகள் குறித்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொல்லியல் துறை அறிவிப்பது வழக்கம்.

அப்போதுதான் மார்ச் மாதம் பணிகள் தொடங்கி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மழைக்காலத்திற்கு முன்பு நிறைவு செய்ய முடியும். ஆகையால், தமிழ்நாட்டில் அகழாய்வுப் பணிகள் தொடங்குவது குறித்த தமிழக அரசின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பு - தமிழர் தேசிய கொற்றம் கட்சித்தலைவர் வியனரசு!

ABOUT THE AUTHOR

...view details