தமிழ்நாடு

tamil nadu

லியோ திரைப்பட விவகாரம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் விளக்கம் கேட்ட நீதிமன்றம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 6:33 PM IST

Director Lokesh Kanagaraj: லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

லியோ திரைப்பட விவகாரம்
லியோ திரைப்பட விவகாரம்

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முருகன். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் கலவரம், சட்ட விரோத செயல்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற காட்சிகள் மூலம் சமூகத்திற்குத் தவறான வழிகாட்டுதல்களை முன்னெடுத்துள்ளார்.

இதுபோன்ற படங்களைத் தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு இந்தியத் தண்டனை சட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்படக் குழு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்த வழக்கு, நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்த மனு இன்று (ஜன.4) மீண்டும் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பிலிருந்து விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:சொத்திற்காக தாய்க்கு இடையூறு செய்யும் மகன்; எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார்!

ABOUT THE AUTHOR

...view details