தமிழ்நாடு

tamil nadu

'விசிக கொடிக்கம்பத்தை அதே இடத்தில் நிறுவுக' - காவல்துறைக்கு பறந்த உத்தரவு - நடந்தவற்றை விளக்கும் தா.மாலின்

By

Published : Jun 29, 2023, 10:38 PM IST

Updated : Jun 30, 2023, 8:46 PM IST

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே மேலப்பட்டியில் விசிக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் கொலை முயற்சி வழக்கில் 34 பேர் கைது செய்யப்பட்டது ஏன்? என்றும் தமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்றும் அக்கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் தா.மாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

'விசிக கொடிக்கம்பத்தை அதே இடத்தில் நிறுவுக' - காவல்துறைக்கு பறந்த உத்தரவு - நடந்தவற்றை விளக்கும் தா.மாலின்

மதுரை:பேரையூர் தாலுகா, மேலப்பட்டி கிராமத்தில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை (VCK flagpole issue) காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள விசிக கொடிக்கம்பத்தை காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவு என்று பொய்க் கூறி அகற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பான தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவனின் பார்வைக்கு எட்டியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கொடிக்கம்பத்தை தகர்த்த காவல்துறை அதிகாரிகளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டித்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிப்பதாகவும், நேர்மை திறத்துடன் அதிகார அத்துமீறலைக் கண்டித்துள்ள நீதி அறவோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி என்றும் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan) தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய அக்கட்சியின் இளஞ்சிறுத்தைகள் பாசறை மாநில துணைப் செயலாளர் தா.மாலின், 'கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் அமைந்துள்ள மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடிக்கம்பம் காவல் துறையினரால் அகற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, 'மீண்டும் அதே இடத்தில் விசிக கொடிக்கம்பத்தை நிறுவ வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

விசிக கொடிக்கம்பம் அகற்றம்:இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் மாலின் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ''மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவிலுள்ள மேலப்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அங்குள்ள ஆதிக்க சாதியினரும், காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு நேற்று முன்தினம் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்து விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை விடுத்திருந்தார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

மேலப்பட்டி கிராமத்தில் தனிநபருக்குச் சொந்தமான ஒரு அடி அகலமுள்ள இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் அருகே இந்தியக் குடியரசுக் கட்சியின் கொடிக்கம்பமும் கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், இவ்விரண்டு கம்பங்களையும் அகற்ற குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், பிறரையும் சேர்த்துக் கொண்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வந்ததாக தெரியவருகிறது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்று திட்டமிட்டு ஒரு பொய்யான தகவலைப் பரப்பி, விசிக கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 4 துணை ஆய்வாளர்கள், இரண்டு ஆய்வாளர்கள், ஒரு டிஎஸ்பி தலைமையில் இந்த செயலில் இறங்கினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இதனைத் தடுக்க வந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் துன்புறுத்தியுள்ளனர்.

பெண்கள் மீது தடியடி: அந்தக் கொடிக்கம்பப் பீடத்தின் மீது நின்று முழக்கமிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி பிரயோகம் செய்துள்ளனர். இதனால், 8-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், 24 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையா ஏவல்துறையா?:காவலரை பணி செய்ய அனுமதிக்கவில்லை என்ற அடிப்படையில் வழக்கு தொடுக்கலாம். ஆனால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? டிஜிபி சைலேந்திரபாபு யார் கையில் இருக்கிறார்? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்தபோதும் இக்கேள்வியைக் கேட்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர், ஆனாலும் இந்தக் கோரிக்கையை திமுகவிடம் வைக்க வேண்டிய கடமை விசிகவுக்கு உள்ளதாக கூறினார்.

பணியிடைநீக்கம் செய்க:மேலும், இரவோடு இரவாக 24 பேரையும் விசாரணையின்றி சிறையில் அடைத்துள்ளதாகவும் மேலும், பெண்கள் 5 பேர் உட்பட 14 பேரை காவல்துறையினர் தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதும் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்களை இரவு நேரங்களில் கூட துன்புறுத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த விஷயத்தில் தொடர்புடைய பேரையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட அனைத்துக் காவலர்களையும் பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்தோடு, டிஎஸ்பி மற்றும்ம வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட அவர்கள் அனைவரின் மீதும் தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனியாருக்கு சொந்தமான அந்த ஓரடி இடம் குறித்து பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால், தவறான பொய்யான தகவலின் அடிப்படையில், காவல் அதிகாரிகளின் துணையோடு அதைப் பிடுங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?'' என்று கேள்வியெழுப்பினார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை அழைக்கும்போது உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டதாகவும், அரசு வழக்கறிஞர்தான் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று ஜூன் 30ஆம் தேதிக்கு தள்ளி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதற்குள் இந்தப் பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்கிறோம் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் அறத்தை வரவேற்கிறோம்:இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஒரு அடி பிரச்னையை கலவரமாக ஆக்கிவிட்டீர்கள் என்று நீதியரசர் வன்மையாக கண்டித்ததோடு, பேசி தீர்த்திருக்க வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்பியதாக விவரித்தார்.

மேலும் பேசிய அவர், வரும் ஜூன் 30ஆம் தேதி (நாளை) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, அதே இடத்தில் விசிக கொடிக்கம்பத்தை நிறுவிக் கொள்ளலாம் என வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள், நீதியரசரின் அறத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

ஆனால், காவல்துறையின் நடவடிக்கை என்பது விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பட்டியலின மக்களுக்கு எதிராகவே செயல்படுவதாக கூறியுள்ளார்.

திருமோகூர் கலவரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மதுரை மாவட்டத்தில் கலவரம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் டிஜிபி சைலேந்திரபாபு, மேல்பாதி கிராமத்தின் கோயில் நுழைவு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரை கைது செய்யவில்லை என்றார். வேங்கைவயல் கிராமத்தில் குடிக்கும் நீரில் மலத்தை கலந்தவர்களை இதுவரை கைது செய்யாமல் இருப்பதாக குற்றம்சாட்டியதோடு, மேலப்பட்டியில் பட்டியலின மக்களுக்கு எதிராக 34 பேர் மீது கொலை முயற்சி வழக்கில் கைது செய்வது என்ன நியாயம்?' என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: TNJFU: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் முறைகேடு? அடுத்தடுத்து சஸ்பெண்ட்.. நடப்பது என்ன?

Last Updated :Jun 30, 2023, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details