தமிழ்நாடு

tamil nadu

நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கார், பைக், தங்கம் பரிசுமழை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 6:47 PM IST

Alanganallur Jallikattu: நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ஆம் தேதியான நேற்றும், பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியான இன்றும் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணி அளவில் மாடு பிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்குகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 மாடுபிடி வீரர்களும் தங்களை பதிவு செய்துள்ள நிலையில், நாளை அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு களத்தில் விளையாடும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

குறைந்தபட்சம் 10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, கேஸ் ஸ்டவ், அண்டா, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, களத்தில் சிறப்பாக விளையாடும் காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

முன்னதாக, இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை, பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரனுக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுk கோப்பையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதேபோல், 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம், இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2ஆம் இடத்தில் சிறப்பாக களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுப் பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல், நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், இவர் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 17 காளைகளை அடக்கி பைக் பரிசு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் 14 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தையும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 10 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாட்டுப்பொங்கலன்று மட்டுமே திறக்கப்படும் நடுமலை மாதேஸ்வரன் கோயில்.. உருவபொம்மைகள் வைத்து வழிபாடு!

ABOUT THE AUTHOR

...view details