கிருஷ்ணகிரி:அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு. அது குறித்து பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. இவ்வாறு தொடர்ந்து எங்கள் முடிவினை விமர்சனம் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கள் கட்சியின் சார்பில் யார் 'முதலமைச்சர் வேட்பாளர்' என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக உள்ளவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் (Edappadi K Palaniswami is CM candidate of AIADMK) அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாச்சாத்தி வழக்கு; 32 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள் சங்கத்தினர்!
மேலும், “எங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கடைசியாக நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதனால், மற்ற கட்சிகள் விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. காவிரி நடுவர் நீதிமன்றம் (Cauvery water dispute) 3 ஆயிரம் கன அடி நீர் வழங்க உத்தரவிட்டதை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக கர்நாடகா மாநிலம் மேல்முறையீடு செய்வது ஏற்புடையது அல்ல” என்றார்.