தமிழ்நாடு

tamil nadu

சுற்றுலா சென்ற சிற்பி வீட்டில் கொள்ளை.. ஓசூர் போலீசார் தீவிர விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 6:30 PM IST

Hosur Theft in hosur: ஓசூர் அருகே சுற்றுலா சென்றிருந்த கோயில் சிற்பி வீட்டில் தங்கம், வெள்ளி உட்பட 20 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே  கோயில் சிற்பி வீட்டில் கொள்ளை..!
ஓசூர் அருகே கோயில் சிற்பி வீட்டில் கொள்ளை..!

கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளி சாலையில் உள்ள சுபாஷ் நகரில் வசித்து வருபவர் தில்லை கோவிந்தராஜ் (50). இவர் சுவாமி சிலைகளைச் செதுக்கும் சிற்பியாகவும், ஒப்பந்தம் அடிப்படையில் கோயில் கட்டுமான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தில்லை கோவிந்தராஜ் தனது குடும்பத்தினரோடு மைசூரூ, ஊட்டி மற்றும் கோவை ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணம் சென்றிருந்தார்.

அப்போது தனது வீட்டைப் பூட்டிவிட்டு, தனது வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தகவல் தெரிவித்து, வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தில்லை கோவிந்தராஜ் வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் ஜன்னலை உடைத்து, கதவை இரும்பு கம்பியால் உடைத்துத் திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 20 லட்சம் ரூபாய் பணம், 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து தில்லை கோவிந்தராஜுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதனையடுத்து அவர் சுற்றுலா சென்றிருந்த தில்லை கோவிந்தராஜ், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டு இருந்த பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் குறித்த தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் இவர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக 65 லட்சம் ஒப்பந்தம் செய்து, 20 லட்சம் பணத்தை முன்பணமாகப் பெற்று வீட்டில் வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. அந்த பணத்தையும், தங்க நகைகளையும் தில்லை கோவிந்தராஜ் சுற்றுலா சென்ற சமயத்தில், மர்ம நபர்கள் அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூருவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து - தாயும், மகளும் உடல் கருகி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details