தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 2 குழந்தைகள் மாயம் - நடந்தது என்ன?

By

Published : Aug 10, 2023, 10:34 AM IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்மணிக்கு துணையாக இருந்த சிறுவன் மற்றும் சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

two children missing in Kancheepuram govt hospital
அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் மாயம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் மாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள மகப்பேறு நலப் பிரிவில் மட்டும் நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் காமாட்சி (28) என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கணவர் மூர்த்தி, 4 வயது மகன் சக்திவேல், உறவினர் குள்ளம்மாள், அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோருடன் வந்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது நேற்று காமாட்சிக்கு சுகப் பிரசவம் ஆன நிலையில், அவருடைய கணவர் மூர்த்தி, மகன் சக்திவேல், குள்ளம்மாள், மகள் சௌந்தர்யா ஆகிய 4 பேரும் மகப்பேறு நலப்பிரிவு அருகே இருந்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு பெண் இவர்களுடன் பேச்சு கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர் நேற்று மாலை மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே உணவு சாப்பிடலாம் என அவர்களை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து சிறுவன் சக்திவேல், சிறுமி செளந்தர்யா ஆகியோரைக் காணவில்லை என்பதை அறிந்த குடும்பத்தினர், அருகில் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பார்கள் என நினைத்து அவர்களைத் தேடியுள்ளனர். ஆனால் சுமார் 20 மணி நேரம் ஆகியும் இருவரும் எங்கும் காணப்படாததால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி மற்றும் குள்ளம்மாள் ஆகியோர், மருத்துவமனை நிர்வாகத்திடம் தங்கள் குழந்தைகளை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காஞ்சி காவல் ஆய்வாளர் வெற்றிச் செல்வன் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூர்த்தி, காமாட்சி , குள்ளம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.

சிறுவனை பறிகொடுத்த மூர்த்தி கூறும் போது, "என் பிள்ளை எங்கே சென்றாலும் உடனே திரும்ப வந்து விடுவான். இவ்வளவு மணி ஆகியும் என் பிள்ளை வராததால் யாரோ கடத்திச் சென்றிருக்க வேண்டும்" எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, போலீசார் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தின் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள பல கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதால் குழந்தையை கண்டுபிடிப்பதில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் உள்ளே இருந்து அடையாளம் தெரியாத ஒருவரால் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் கடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மூர்த்தி மற்றும் குள்ளம்மாள் ஆகியோரிடம் பேச்சு கொடுத்த மர்மப் பெண் தான் குழந்தைகளை கடத்தினாரா? அல்லது வேறு யாராவது கடத்தினரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details