தமிழ்நாடு

tamil nadu

பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு முக்கிய பொறுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 9:53 AM IST

Updated : Oct 6, 2023, 4:07 PM IST

P0adappai Guna OBC leader in BJP: பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவராக பாஜகவில் பதவி அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

OBC leader in BJP
பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு பாஜகவில் OBC அணி தலைவர் பதவி

காஞ்சிபுரம்: மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்கிற குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.

இவர் மீது 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 48 வழக்குகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து என்கவுண்டருக்கு பெயர்பெற்ற காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சிறையில் இருந்த படப்பை குணா 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு வகையில் கட்சிப் பணியிலும் எல்லம்மாள் ஈடுபட்டு வந்தார்.

இதனால், மறைமுகமாக கட்சிக்கு தேவையான நிதி உதவிகள் உள்ளிட்டவற்றை படப்பை குணா செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கூட படப்பை குணா ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற, பாஜக கூட்டம் ஒன்றில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள வந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே கட்சிப் பணியில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கலந்து கொள்வது, கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார். விரைவில் படைப்பை குணா பாஜகவில் இணைவார் என காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி.செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும், காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுவதாக” அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை நிலுவையில் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக பட்டியல் அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பை குணாவிற்கும் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பிரபல ரவுடிகளை காவல்துறை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களை பாஜகவில் இணைத்து, அவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: தன் மீது தவறில்லை என அண்ணாமலை மறுப்பு!

Last Updated :Oct 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details