தமிழ்நாடு

tamil nadu

Vadalur ThaiPusam Jothi dharsan: வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!

By

Published : Feb 5, 2023, 4:59 PM IST

வடலூர் 152ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில், ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதியினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வள்ளலார் ஜோதி தரிசனம்
வள்ளலார் ஜோதி தரிசனம்

வள்ளலார் ஜோதி தரிசனம்

கடலூர்: அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஆக வாழ்ந்தவர், ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார். கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார்.

அன்று முதல் இன்று வரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கப்பட்டு வருகிறது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்க கொடிஏற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி, 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தை மாசம் தவிர்த்த பிற மாத பூச நட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். கண்ணாடிக் கதவுகளில் கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி ஆகும்.

கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, ஜோதி தரிசனம் தெரிந்ததை ’அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை’ என கோஷத்துடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம், மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி உலகில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி, இன்று அதிகாலை முதல் தரிசனத்தை கண்டு களித்தனர் . தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அன்னதானம் வழங்குபவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற்றே வழங்க வேண்டும். அன்னதானத்துக்கு கொண்டு வரப்படும் உணவுப் பொருள்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே வடலூர் தைப்பூச திருவிழா ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் மது மற்றும் மாமிசக் கடைகளை முழுவதுமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தைப்பூசத் திருவிழா கோலாகலம்: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்..

ABOUT THE AUTHOR

...view details