தமிழ்நாடு

tamil nadu

என் மகள் இறப்புக்கு நீட் பயிற்சி மையம் தான் காரணம் - தற்கொலை செய்த மாணவியின் பெற்றோர் புகார்!

By

Published : Apr 6, 2023, 8:44 PM IST

கடலூரில் நீட் கோச்சிங் சென்ற மாணவி குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மன வேதனையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால், தனது மகளில் இறப்புக்கு நீட் பயிற்சி மையம் தான் காரணம் என தந்தை குற்றம்சாட்டுகிறார்.

Etv Bharat நீட் பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை
Etv Bharat நீட் பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை

நீட் பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை

கடலூர்மாவட்டம், நெய்வேலி டவுன்ஷூப் வட்டம், 30ல் வசித்து வருபவர், உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக இவர் பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மகள் நிஷா (18), கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். 12ஆம் வகுப்பில் 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார், நிஷா. நீட் தேர்வில் சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

இருந்தாலும், அவரது பெற்றோர்கள் நீட் தேர்வு பயிற்சிக்காக இந்த ஆண்டு நெய்வேலி அருகே இந்திரா நகரில் அமைந்துள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி அளித்து வந்தனர். இங்கு கடந்த ஓராண்டாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிஷா வரும் மே மாதம் 7ஆம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்குத் தயாராகி வந்தார். இதற்காக அந்தப் பயிற்சி மையத்தில், தற்போது தேர்வுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த தேர்வுகளை அவர் எழுதி வந்த நிலையில் அதில் சரியான மதிப்பெண்கள் பெறவில்லை எனத் தெரியவருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா நேற்று ( ஏப்.05 ) வகுப்பு இல்லாத நிலையிலும் வகுப்பு உள்ளதாகக் கூறிவிட்டு நெய்வேலியில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு வந்தார். வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அவர் நேற்று மாலை 5:40 மணி அளவில் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் முன்பு தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் இந்த தகவலை காவல் துறையினருக்குத் தெரிவிக்க ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்விற்கு பயந்து மாணவ மாணவிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் தொடர்ந்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் உடல் கடலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிணவறை அருகே உயிரிழந்த மனைவியின் தந்தை உத்திராபதி செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது, “எனது மகள் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து வந்தார். ஓராண்டு காலமாக ஆகாஷ் என்ற நீட் பயிற்சி மையத்தின் மூலம் நெய்வேலியில் பயிற்சி பெற்று வந்தார். அவர்கள் வைக்கும் தேர்வுகள் அனைத்தும் நன்றாக மதிப்பெண் எடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வைக்கப்பட்ட தேர்வில் 399 எடுத்திருந்தாள். இதனால் 400 மதிப்பெண் மேலிருக்கும் மாணவர்களை தனியாக வைத்து சிறப்பு கோச்சிங் கொடுக்கப்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த எனது மகள், கடந்த இரண்டு நாட்களாக சோகமாக காணப்பட்டாள். நாங்கள் ஆறுதல் தெரிவித்தோம். ஆனால், இப்படி ஒரு தவறான முடிவை எடுத்து விட்டாள். இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு மையம் தேர்வு எழுத பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்கள் மாணவ மாணவிகளை மதிப்பெண்களை வைத்து பாகுபாடு காட்டுவதால், மாணவச் செல்வங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது.

அவர்கள் இதுபோன்று தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். எனது மகளுக்கு நேர்ந்த சோகம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. மன அழுத்தத்தை ஏற்படுத்திய தனியார் நீட் தேர்வு மையத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:காலேஜ் பஸ் மோதியதில் தந்தை, மகன் மரணம்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details