கோயம்புத்தூர்: ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹாலில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரக் கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார். மோடி மகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மோடியின் மகள் என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம், பரிசுகளுடன், “குட் டச்” (Good Touch) “பேட் டச்” (Bad Touch) குறித்த வகுப்புகள் எடுக்கப்படுகிறது. நடிகைகளை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “டீப் ஃபேக்” (deep fake) புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரபலங்கள் மட்டுமின்றி, சாதாரணப் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது, இதனால் அவமானப்படுவது நாம் அல்ல. சரியான முறையில் உடனிருப்பவர்களுடன் பேசி, மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். காவல் துறையில் தொழில் நுட்பக் குழுக்களைப் பலப்படுத்த வேண்டும். சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசுடன் மகளிர் அணித் தலைவர் என்ற முறையில் பேசி உரிய முயற்சி எடுப்பேன். அதேபோல, தங்களுக்கு நடைபெறும் குற்றங்களை 50 சதவீதம் பெண்கள் வெளியில் சொல்வதில்லை என்பதால், குற்றவாளிகளுக்கு தைரியம் கிடைக்கிறது.