தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு திக் திக்: அக்டோபர் 1இல் விசாரணை; களத்தில் தனிப்படை!

By

Published : Sep 2, 2021, 1:40 PM IST

Updated : Sep 2, 2021, 3:09 PM IST

கோடநாடு

13:39 September 02

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடநாடு வழக்கு: அக்டோபர் 1இல் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட், பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. 

பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களை கொள்ளையடித்து சென்றது. இந்தக் கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். 

இந்நிலையில், கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் கடந்த மாதம் மறுவிசாரணை மேற்கொண்டனர். வழக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை தொடங்கியது. சாட்சிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ் ஆஜராகினர். இன்றைய விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடவியல் நிபுணர் ராஜ் மோகன், கோத்தகிரி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் 3 பேரும் ஆஜராகவில்லை. விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் காவல் கண்கணிப்பாளர் தலமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்: நீதிமன்றம் உத்தரவு

Last Updated :Sep 2, 2021, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details