தமிழ்நாடு

tamil nadu

‘வனத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை மாற்ற வேண்டும்’ - வன ஆர்வலர்கள் கோரிக்கை

By

Published : Nov 19, 2022, 10:16 PM IST

தமிழ்நாடு வனத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வன அலுவலர்களை மாற்றக்கோரியும், காலியாக உள்ள இடங்களை நிரப்பக்கோரியும் வன விலங்கு ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை
வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 9ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வனத்துறையில் பணி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று வருடத்திற்கு மேல் ஒரே இடத்தில் அல்லது வனச்சரகத்தில் பணி செய்யும் அலுவலர்களை, வேறு இடத்திற்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

எனினும் பெரும்பான்மையான இடங்களில் அலுவலர்கள் ஒரே இடத்தில் அல்லது வனக்கோட்டத்தில் பணி புரிகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில்,

ஆள்பற்றாக்குறையால் வன உயிரினங்கள் பாதிக்கக்கூடும்: "வனத்துறையில் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரே மாவட்டம் மற்றும் கோட்டத்தில் பணியாற்றுவதால், வனக்குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருக்ககூடும். இதனால் அதிகாரிகள் மக்கள் பணிகளில் கூட அலட்சியம் காட்ட நேரிடும். கோயம்புத்தூர் மற்றும் முதுமலை வெளிமண்டலங்களில் வனக்குற்றங்கள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு உதாரணமாக மசினகுடி அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு புலி ஆவரலா காட்டிலும் , அறிய வகை விலங்கான, கழுதைப்புலி (hyena) மாவனல்லா-மசினகுடி சாலையில் நள்ளிரவில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதனை வனத்துறை விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் விசாரணை எதுவும் வனத்துறை செய்யவில்லை.

தங்களின் மேலிட செல்வாக்கினாலும் சிலர் இடமாறுதலில் தப்புகின்றனர். வேண்டியவர்களுக்கு பணியை செய்துகொடுகின்றனர். எனவே அரசு இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். வனத்துறையில் போதுமான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்த போதிலும், முக்கிய வனச்சரகங்களில் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதனால் காடுகள் மற்றும் வன உயிரினங்கள் பாதிக்கக்கூடும்” என எச்சரிக்கை விடுத்தார்.

மூன்று வருடத்திற்க்கு ஒரு முறை: இதே போல வன ஆராய்ச்சியாளர் ஜோசப் ஹூவர் நம்மிடம் கூறுகையில், "தமிழ்நாடு வன சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் சில வனக்கோட்டங்களில் பெரும்பான்மையான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிகின்றனர்.

எனவே அவர்கள் உள்ளூர் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நேரிடும். இது ஒரு ஆரோக்கியாமான நடைமுறை இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை நீடிக்கிறது.

எனவே கீழ்நிலை அலுவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மூன்று வருடத்திற்க்கு ஒரு முறை மாற்றுவது காடுகளையும் வன உயிரினங்களையும் பாதுகாக்க உதவும். இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இரண்டு வருடத்திற்கு முன்பாக நடந்த மனித-விலங்கு மோதல்கள், யானை இறப்பு விகிதம் தற்போது குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வனத்துறையை மேம்படுத்தவும் காடுகள், விலங்குகள், பறவைகள் தாவரங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தற்போது உள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிக ஈடுபாடு காட்டுகிறது. புதிதாக வன சரணாலயங்கள், சதுப்பு நில காடுகள், வனப்பரப்பை அதிகப்படுத்த நடவடிக்கை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

புலிகள் காப்பகங்களில் கள இயக்குனர்களை நியமிக்க வேண்டும். தலைமை வனப் பாதுகாவலரின் பதவியும் காலியாக உள்ளது. அந்த இடத்தையும் விரைவாக நிரப்பினால், வனத்துக்காக முதலமைச்சர் எடுக்கும் முயற்சி உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டு வன உயிரியல் வாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள காடுகளை பற்றி நன்கு தெரிந்த இயற்கை ஆர்வலர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

ஆனால் தற்போது உள்ள வாரியத்தில் அயல்நாடுகள் மற்றும் வர்த்தக ரீதியாக உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். இதுவும் ஒரு ஆரோக்கியமான நிலைப்பாடு இல்லை. எனவே அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வாரியத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்", என ஹூவர் வேண்டுகோள் விடுத்தார்.

வன ஆராய்ச்சியாளர் ஜோசப் ஹூவர் அளித்த பேட்டி

நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: இது குறித்து தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாச ரெட்டி நம்மிடம் கூறுகையில், "புலிகள் காப்பகங்களில் கள இயக்குனர்கள் பணி நியமனத்தை பொறுத்தவரை, மூன்று காப்பகங்களில் அதாவது சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை மற்றும் களக்காடு முண்டந்துறை கள இயக்குனர்களுக்கான பதவி காலியாக உள்ளன.

கள இயக்குனர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் வன அலுவலர்களை வருடந்தோறும் கணக்கெடுத்து அவர்களை மாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் நிலப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details