தமிழ்நாடு

tamil nadu

"உச்சநீதிமன்றம் செல்வதை விட உட்கார்ந்து பேசுவது சிறந்தது" - ஆளுநர் விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 6:26 PM IST

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என டெல்லி வரை செல்வதை விட ஆளுநரிடம் உட்கார்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது என சென்னை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Tamilisai Soundararajan said problem should be resolved by sitting and talking to the governor without going to court
தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நான் தாழ்மையான ஒரு ஆலோசனை கூறினால் அதைக் கேட்காமல் தெலுங்கானாவை போய் பாரு என கூறுவதும், புதுச்சேரியை குண்டு சட்டி என கூறுவதும், ஒரு துணை நிலை மாநிலம் அதற்கு ஒரு அமைச்சரவை முதலமைச்சர் திட்டம் இருக்கிறது.

பெரிய மாநிலமாக இருக்கிறோம் என கூறிக்கொண்டு புதுச்சேரியை குண்டு சட்டி என கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தெலங்கானாவில் என்ன நடக்கணுமோ அது சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நேரில் சென்று பார்க்க சொல்லுங்கள். என்னுடைய சொந்த மாநிலத்தில் இது போல் இருப்பதால் நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள் எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

சில பேர் இது என்ன குடும்பமா உட்கார்ந்து பேசுவதற்கு என கூறுகிறார்கள். தமிழ்நாடு குடும்பம் தானே, அதை பேசி தானே ஆகவேண்டும். வழக்குகள் விவாதங்கள் என டெல்லி வரை செல்வதை விட உட்கார்ந்து பேசுவது நல்லது என இன்றும் வரை கூறுகிறேன், மக்கள் மீது அக்கறை இருந்தால் பேசட்டும்.

தெலங்கானாவில் உள்ள பிரச்சனைகளை நான் பேசுவதற்கு தயார் முதலமைச்சர் வந்தால் என ஏற்கனவே கூறியிருக்கிறேன் அங்குள்ள மக்கள் எனை பாராட்டுகிறார்கள். அவர்களின் பிரச்சனையை கையில் எடுத்து நான் தீர்த்து உள்ளேன் போக்குவரத்து பிரச்சனை, 42 ஆயிரம் தொழிலாளர்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை வரும்போதும் தீர்த்து வைத்தேன். எதிர் சங்க உறுப்பினர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்பதையும் கேட்டு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி அதை நிறைவேற்ற வைத்தேன்.

அதனால் தெலங்கானாவை நீங்கள் பார்க்க வேண்டாம். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் நாங்கள் வருகிறோம், கவர்னர் உட்கார்ந்து பேசுவோம். என்ன பிரச்சனை என்ன சந்தேகம் அதை நாங்கள் கேட்கிறோம் நீங்கள் எங்களுக்கு நேரம் கொடுங்கள் என்பதில் எந்த தவறும் இல்லை.

மரியாதைக்குரிய ஜெயலலிதாவை குறித்து பாராட்டுவதற்கு மனது வந்ததை பாராட்டுகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வேந்தராக இருக்க வேண்டும் என கூறிய போது திமுக தான் எதிர்த்தது. ஒரு குறிப்பிட்ட நிதியை அறிவித்துவிட்டு நாங்கள் வேந்தராக இருந்தால்தான் இப்படிப்பட்ட உதவிகளை செய்ய முடியும் என கூறுகிறார்.

இப்பொழுதும் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் தான் நிர்வாகித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிர்வகித்துக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது, பல்கலைக்கழகங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் வேந்தராக இருந்தால் தான் உதவி செய்வோம் எனக் கூறுவது முதல் தவறு.

மத்திய அரசு, மாநில அரசுகள் தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள் அது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் வேந்தராக இருந்தால் மாவட்ட செயலாளராக இருக்கும் ஒரு அரசியல்வாதியை துணை வேந்தர்களாக ஆக்குவீர்கள். அதன் பிறகு அவர்கள் ஊழல் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அதனால் வேந்தர் பதவியில் கவர்னர் இருப்பதுதான் சரி. இல்லை என்றால் பல்கலைக்கழகங்கள் மீது முழுவதுமாக அரசியல் சாயம் பூசப்பட்டுவிடும். ஒரு கட்சியை சார்ந்த நபர்கள் துணைவேந்தராக இருந்தால் எப்படி நடுநிலையாக செயல்படுவார்கள். உயர் கல்வித் துறை அமைச்சர் தான் இப்பொழுதும் பொறுப்பாளராக உள்ளார். முதலமைச்சர் வேந்தராக இருந்தால்தான் உதவி செய்வேன் எனக் கூறுவது தவறு. அந்த தவறை செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்திய புகார்; கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிரடி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details