சென்னை: கே.கே.நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்ற போது, இவரது வங்கி கணக்கிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை சிறுக சிறுக பணம் எடுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பணம் காணாமல் போனது குறித்து மருத்துவர் ராமசந்திரன் இணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரானது தியாகராயநகர் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு, மருத்துவரின் வங்கி கணக்கு எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக் நகரில் உள்ள ஒரு செல்போன் கடையில் அடிக்கடி பணம் ஜிபே மூலமாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர், அசோக் நகரில் உள்ள அந்த செல்போன் கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சிறுவன் ஒருவன், அடிக்கடி வந்து ஜிபே மூலமாக கடையின் உரிமையாளருக்கு பணத்தை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த சிறுவன் மருத்துவர் ராமசந்திரனின் உறவினரின் மகன் என்பதும் 14 வயது சிறுவன் மருத்துவரின் வீட்டில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை பிடித்த காவல் துறையினர் அவனிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கே.கே. நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன், மருத்துவர் ராமசந்திரனின் வீட்டில் தங்கி சில வருடங்களாக படித்து வருகின்றார். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்த சிறுவன் மருத்துவர் ராமசந்திரனின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளான்.