தமிழ்நாடு

tamil nadu

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்!

By

Published : Apr 8, 2023, 5:23 PM IST

Updated : Apr 8, 2023, 6:48 PM IST

2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்!
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்!

சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை:இரண்டு நாட்கள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலம் இன்று (ஏப்ரல் 8) பிற்பகல் 2.50 மணிக்கு மேல் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கார் மூலமாகச் சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, விமான நிலையத்தில் ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் அருகிலிருந்தனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, அடையாறு ஐஎன்எஸ் சென்றார். தொடர்ந்து பிரதமர், அங்கு இருந்து சாலை மார்க்கமாகச் சென்னையில் உள்ள டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்றார்.

அங்கு அவரை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இயக்கப்படும் பேட்டரி காரில் பிரதமர் பயணித்தார். இந்த பயணத்தின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரும் அதே பேட்டரி காரில் அமர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்குச் சென்ற பிரதமர் மோடி, சென்னை முதல் கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத்ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே சென்னை - மைசூரு இடையில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தாலும், தமிழ்நாட்டினுள் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை என்ற பெருமையை, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை பெற்றுள்ளது. இந்த ரயில் சேவையை நாளை (ஏப்ரல் 9) முதல் பயணிகள் பயன்படுத்த உள்ளனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 40 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிவடைந்ததாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் இந்த ரயில் சேவை, கோவை - சென்னை மார்க்கமாக காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை வந்தடையும். அதேநேரம் சென்னை - கோவை மார்க்கத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும். இந்த இரு மார்க்கத்திலும் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் இதற்கான கட்டணமாக 2ஆம் வகுப்புக்கு 1,215 ரூபாய் (உணவுடன்) அல்லது 1,057 ரூபாய் (உணவில்லாமல்) என்றும், முதல் வகுப்புக்கு 2,310 ரூபாய் (உணவுடன்) அல்லது 2,116 ரூபாய் (உணவில்லாமல்) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை.. மனமிறங்குமா மத்திய அரசு?

Last Updated : Apr 8, 2023, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details