தமிழ்நாடு

tamil nadu

ஆங்கிலப் புத்தாண்டு 2024; அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 4:05 PM IST

New Year Wishes: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Political Leaders Wishes for New Year
புத்தாண்டு வாழ்த்துக்கள்

சென்னை:நாளை 2024 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதனைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக காவல்துறை தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும், உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. “எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2024ஆம் ஆண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையிலும், நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் தமிழகத்தின் இரு முனைகளையும் சிதைத்திருக்கிறது. அவற்றிலிருந்து மீள்வதே புதிய ஆண்டின் சவாலாக இருக்கும்.

நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும், பொருளாதாரம் வளரும், மகிழ்ச்சி பெருகும், அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சுகாதாரமற்ற சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள் ஆகியவை அறவே நீங்கி, வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை உருவாகும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு திகழட்டும்.

அகம்பாவம், ஆணவம், துரோகம், கொடூரச் சிந்தனை, நாகரிகமற்ற பேச்சு போன்றவை அகன்று, ஒழுக்கம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களான அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு மலரட்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். தமிழ்நாட்டில் அந்த மாற்றத்தை மலரச் செய்யும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்” ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இது. கடந்துபோன 2023ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் இயற்கையின் கோர தாண்டவம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது.

தமிழ்நாட்டில், சென்னையிலும், அதனை ஒட்டியுள்ள நான்கு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் மழையும், வெள்ளமும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை துன்ப இருளில் தள்ளிவிட்டன. இந்திய உபகண்டத்திற்கே வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சசிகலா:தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். இனி நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்.

தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதிய அணி திரட்டல், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் சாதிய விஷக் கருத்துக்களை பரப்பும் நடவடிக்கைகளை புறந்தள்ளி சாதி, மத பேதமற்ற சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும். விடைபெறும் ஆண்டின் அனுபவங்களை உரமாக்கி பூக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜனநாயகம் - பகுத்தறிவு - சமூகநீதி - சமத்துவ ஒளி தரும் ஆண்டாக மலரட்டும். நகரும் ஆண்டு பல சோதனைகளும், வேதனைகளும் தந்த ஓர் ஆண்டாகி முடிந்துள்ளது.

பிறக்கும் புத்தாண்டு வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஓராண்டாக, ஜனநாயகம், பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவ ஒளி தரும் ஆண்டாகப் பூத்து மலரட்டும். மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஆண்டாக சிறக்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிங்க: 2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்..

ABOUT THE AUTHOR

...view details