தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கிவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்யத் துடிப்பதில் உள்நோக்கம் - பாமக நிறுவனர் ராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 5:33 PM IST

PMK Ramadoss: நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2,534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக தமிழக அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

pmk ramadoss has insisted that vacancies in municipal administration should be filled by tnpsc
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2,534 தொடக்க நிலைப் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல் நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.

நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 2,534 தொடக்க நிலைப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகமே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு 10 ஆயிரம் பணியாளர்களைக் கூட தேர்ந்தெடுப்பதில்லை. அதனால் அதற்கு பணிச்சுமை கிடையாது. அதற்கெல்லாம் மேலாக, அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்வி நிறுவனம். அரசு ஊழியர்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்போ, அனுபவமோ அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கிடையாது.

அவ்வாறு இருக்கும் போது, டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.

அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.

அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2,534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து யாரையாவது நீக்க முடியுமா? - உயர் நீதிமன்றம் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details