தமிழ்நாடு

tamil nadu

நடிகர் சரத்பாபு மரணம்: பிரதமர், ஆளுநர், ரஜினி, கமல் உள்ளிட்டப் பலர் இரங்கல்!

By

Published : May 23, 2023, 10:34 AM IST

நடிகர் சரத்பாபுவின் மரணத்திற்கு பிரதமர் மோடி, ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Actor Sarath Babu
நடிகர் சரத்பாபு

சென்னை: நடிகர் சரத்பாபு கதாநாயகன், குணசித்திர வேடம், நாயகர்களின் நண்பன், வில்லன் என 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் கடந்த 1973ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன்பிறகு 1977ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப் பிரவேசம், நிழல்கள் நிஜமாகிறது போன்ற ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவருக்கு கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சில நாட்களாகவே அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

அதுமட்டுமின்றி மே 3ஆம் தேதி சரத்பாபு காலமானார் எனப் பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. ஆனால் அந்த தகவல் வதந்தி எனவும், சரத்பாபு நலமாக உள்ளார் எனவும், இது போன்ற வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சரத்பாபு மே 22ஆம் தேதி நண்பகல் 1.32 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவரது மரணம் திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, “நடிகர் சரத் பாபுவின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் பல்துறை மற்றும் படைப்பாற்றலில் திறமை மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி; “பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது திறமையும், திரைத்துறைக்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்து இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்த்; “என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என தனது இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்; “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர், சரத்பாபு. காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், நடிகை சுகாசினி, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்டப் பலர் தங்களது இரங்களையும், மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Actor Sarath Babu: நடிகர் சரத்பாபு காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details