தமிழ்நாடு

tamil nadu

"ராகுல் செய்வதை, ஸ்டாலின் செய்ய முடியாதா?" ஈடிவி பாரத் பேட்டியை சுட்டிக்காட்டி ராமதாஸ் அறிக்கை...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:17 PM IST

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:ஈடிவி பாரத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் கடிதம் எழுதி உள்ளீர்கள்.. ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதா? என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு சமூகநீதி மண். இன்றைக்கு இந்தியாவில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண். சாதிவாரி கணக்கெடுப்பைப் பொறுத்தமட்டில், 'சென்ஸஸ்' என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் நிர்வாகப் பட்டியலில் இருக்கிறது. அதனால்தான் தி.மு.க.வும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 'சாதிவாரி கணக்கெடுப்பு' 2011-இல் துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பா.ஜ.க. அரசு அந்த கணக்கெடுப்பு முடிவை வெளியிடவில்லை.

அமைச்சரவையிலேயே 2015-இல் இதற்காக நிபுணர் குழு அமைத்தும் இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பின் அந்த நிபுணர் குழு அறிக்கையையும் வெளியிடவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் எப்படி 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை வாய்ப்பு - கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததோ அது போல ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதி வாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

இந்த பேட்டியை சுட்டிக்காட்டி இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சிக்கலில் தமிழக அரசின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்க்கும் போது, சமூகநீதிக்கு எதிரான சக்திகளால் தமிழக முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகிறாரோ" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

"தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது. மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சமூகநீதியை வழங்கும் என்பதால், மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கூறியுள்ளார்”.

இந்த விடையைப் பார்க்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த மாநில அரசின் அதிகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை அல்லது உணர்ந்திருந்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யும்போது அதை தமது அரசு ஏற்று, செயல்படுத்தும் என்று முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். மேலும், ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் தான் சமூக நீதி வழங்க முடியும் என்றால், தமிழகத்தைச் சுற்றியுள்ள இந்த மாநிலங்கள் எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்றன? என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்குவாரா?

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே மூன்று முறை கிடைத்தன. ஆனால், மூன்று முறையும் அந்த வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. அந்த தவறுகளுக்கு தீர்வு காணும் வகையிலாவது இப்போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை நடத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details