தமிழ்நாடு

tamil nadu

பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!

By

Published : Aug 2, 2022, 2:10 PM IST

பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மைல்கல் - முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பரந்தூர் விமான நிலையம், மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு எனவும் பொருளாதாரத்தில் ஒரு மைல்கல் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூரில் அமைகிறது என விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று (ஆக. 1) மாநிலங்களவையில் அறிவித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆக. 2) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தற்போது உள்ள சென்னை விமான நிலையம், ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் மென்மேலும் அதிகரித்துவரும் விமானப் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை, அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

புதிய விமான நிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து, சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில், புதிய விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையவுள்ள விமான நிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது.

இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமான நிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமான நிலையத்திற்கான திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்ட மதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும். மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி (Guidelines for Greenfield Airport), தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் (site clearance) பெற மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.

இட அனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து, விமான நிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் (“in-principle” approval) மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தைக் காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினைக் காட்டும் வகையில், திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது, நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு.

தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில், இது மற்றொரு மைல்கல்லாகும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

ABOUT THE AUTHOR

...view details