தமிழ்நாடு

tamil nadu

உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு... விசாரணை ஒத்திவைப்பு

By

Published : Nov 22, 2022, 7:02 AM IST

பச்சையப்பன் கல்லூரிக்கு பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என மனு தாக்கல் செய்ய உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளை சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் அவசர வழக்காக நேற்று (நவ.21) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பேராசிரியர்கள் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் பேராசிரியர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை எனவும், வருகைப்பதிவேடு கல்லூரிகளின் முதல்வர் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், அறக்கட்டளை தரப்பில் பேராசிரியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை எனவும், அவர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவுக்கு எண்ணிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் விளக்க அறிக்கையும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தால் தாக்கல் செய்ய வாய்மொழியாக உத்தரவிட்டு, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை (நவ.22) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: '"சேரி" என அழைக்கும் இடங்களுக்கு அம்பேத்கர், பெரியார் பெயர் சூட்டுங்கள்'

ABOUT THE AUTHOR

...view details