'"சேரி" என அழைக்கும் இடங்களுக்கு அம்பேத்கர், பெரியார் பெயர் சூட்டுங்கள்'

author img

By

Published : Nov 21, 2022, 9:32 PM IST

"சேரி" என அழைக்கும் இடங்களுக்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர் சூட்டுங்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் 'சேரி’ என அழைக்கப்படுகிறது, அவ்வாறு அழைக்கப்படும் அந்த பகுதிகளில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், ஜே.எம்.எச்.அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, அரசு துறைச் செயலாளர்கள், துறைத்தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், 'கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்க சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தயாரித்துள்ள கருவியை வாங்க வேண்டும். இதற்காக மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குத் தலா ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசும் இந்த திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் 'சேரி’ என அழைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அழைக்கப்படும் அந்தப் பகுதிகளில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர் சூட்ட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், ’தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கக்கூடிய சாதிப் பெயர்களை நீக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் செயல்படுவது போல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு ரூ.5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது போல், மாநில அரசும் 1 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி வரவேண்டும். மேலும் 60 கிலோமீட்டர் இடையிலான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும். இதற்காக ஒன்றிய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

மேலும், ’மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்வதற்கான தனி ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும். முதியோருக்கான ஓய்வுத்தொகை பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் முதியோர்கள் உதவித்தொகை பெறுவது பாதிக்கப்படுகிறது. அதனை திரும்பப் பெற வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எத்தனை வழக்கு போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது' - சசிகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.