தமிழ்நாடு

tamil nadu

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலாவின் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 10:31 PM IST

மூன்றாம் நாளாக விசாரணைக்கு வந்த சசிகலா மனு
மூன்றாம் நாளாக விசாரணைக்கு வந்த சசிகலா மனு

VK Sasikala: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 2016ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுகூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை புதிதாக உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு மூன்றாவது நாளாக இன்று (நவ.6) விசாரணை நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, "கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை.

அந்தக் கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக தெரிவித்தார். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தபோது கூட, எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான்" என வாதிட்டார்.

இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், "விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழுகூட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. மேலும் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி, கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால், சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சென்னையில் ஆர்பிஐ நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல்; 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணி தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details