சென்னை:தமிழக பாஜகவின் முன்னாள் நிர்வாகியான நிர்மல் குமார், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக நேர்காணல்களும் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம் சாட்டப்படுவதாகவும், மனுதாரரான அமைச்சர் குறித்த அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.