தமிழ்நாடு

tamil nadu

MDMK Vaiko : மதிமுகவின் சொத்து பட்டியல் வேண்டுமா?.. வைகோ கூறிய பதில்..!

By

Published : May 6, 2023, 4:59 PM IST

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் தலைவர் வைகோ தெரிவித்து உள்ளார்.

Vaiko
Vaiko

MDMK Party Members Celebrates his 30th party Foundation Day

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 30ஆம் ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளரான வைகோ கொடி ஏற்றி, இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

கட்சியின் நிறுவன விழாவை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்பு, ஏழை எளிய மக்களுக்கு தர்பூசணி பழம், மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மதிமுகவின் 30ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள், தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து மதிமுக வெற்றி கொடியை நாட்டுவோம்" என்று கூறினார். மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய வைகோ, "மதிமுகவின் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் மூலமாக முறையாக தணிக்கை செய்யப்பட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சி, தன் சொத்து பட்டியல் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மதிமுக மட்டும் ஏன் வெளியிட வேண்டும்" என கேள்வி எழுப்பினார். தமிழக ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கு பதில் அளித்து பேசிய வைகோ, "காவல் துறையில் காலாவதியான மனிதர் தமிழகத்தில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழக ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறாலாக உள்ளது. அவர் ஆளுநர் பதவிக்கு லாயக்கு அற்றவர். ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என். ரவிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் வேண்டுமானால் பாஜகவின் இந்து அமைப்புகளுக்கு பிரதிநிதியாக இருக்கலாம். இந்தியாவில் இதுவரை எந்த ஆளுநரும் இது போன்ற தவறுகளை செய்தது கிடையாது" என்று கூறினார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தது குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இதுவரை இல்லாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.

மதிமுகவை, திமுகவுடன் இணைத்து விட வேண்டும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். அது தொடர்ந்து அக்கட்சியில் தொடர்ந்து சர்ச்சைகள் அரங்கேறி வருகிறது. திருப்பூர் துரைசாமி அந்த கடிதத்தில், வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக தொடங்கப்பட்டது. ஆனால், இங்கேயே வாரிசு அரசியல் தழைத்தோங்கி உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக உங்களுடைய பேச்சை நம்பி ஏமாற்றம் அடைந்ததில் நானும் ஒருவன். இனிவரும் தலைமுறையினரை ஏமாற்றாமல் மதிமுகவை திமுகவுடன் சேர்த்துவிடலாம் என அக்கடித்தத்தில் தெரிவித்து இருந்தார். மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் துரைசாமி இந்த கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :"மக்களை சாதியால், மதத்தால், பிரிப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது" - முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details