தமிழ்நாடு

tamil nadu

முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பணிச்சுமை கிடையாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:35 PM IST

Updated : Jan 3, 2024, 12:21 PM IST

Minister Ma Subramanian: முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பணிச்சுமை கிடையாது எனவும், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:சென்னை பாரி முனையில் உள்ள சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களை இன்று (ஜன.2) பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் மிகப் பழமையான மருத்துவ கட்டமைப்புகளில் ஒன்று. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து பயன் பெற்று வருகின்றனர். தெற்கு ஆசியாவிலேயே புற நோயாளிகள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில், இந்த மருத்துவமனை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும், ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் செலவில் இன்று பல் மருத்துவக் கல்லூரியில் புதிய பல் மருத்துவப் பிரிவு, உணவருந்தும் கூடம், எல்இடி திரையுடன் கூடிய புனரமைக்கப்பட்ட கலையரங்கம், மாணவர்கள் படிப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஏதுவாக பொது அறை, புதிய சலவையகம், பாதுகாவலர் அறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு உள்ளிட்ட புதிய வசதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை பல் மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் பல் மருத்துவக் கல்லூரி என தமிழகத்தில் மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. கடந்த பட்ஜெட்டில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று, ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கூடிய விடுதி ஒன்று, இந்த ஜனவரி மாத இறுதியில் கட்டத் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

அதேபோல, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு என ரூ.135 கோடி செலவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியும், இதே வளாகத்திலேயே கட்டப்பட உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவ மாணவர்களுக்கான ஒரு விடுதி என ரூ.200 கோடி செலவில் 2 மாணவர்கள் தங்கும் விடுதிகள் இந்த மாத இறுதியில் தமிழக முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியதில் இருந்து 18 மாத காலத்திற்குள் இவை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரும்.

இதையும் படிங்க:சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்புக்கு பணிச்சுமை காரணமல்ல - டீன் தேரணி ராஜன் விளக்கம்..

சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த முதுகலை மாணவர், பணிச்சுமை காரணமாக இறக்கவில்லை. அவர் பணியில் சேர்ந்து ஒரு வாரம்தான் கடந்தது. அவருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அவரே விருப்பப்பட்டு அறுவை சிகிச்சை செய்வதை ஆர்வத்துடன் கண்டறிந்தார். அவரின் இறப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த முதுகலை மருத்துவ மாணவரும் பணிச்சுமையால் இறக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவரை தினமும் அவரின் பெற்றோர் கல்லூரிக்கு அழைத்து வந்து விட்டு, மீண்டும் திருப்பி அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். மன அழுத்தத்தால் மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் தவறான தகவல்களை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு முதுகலை மருத்துவ மாணவர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஜெஎன் 1 கரோனா:கரோனா பரவல் தொடர்ந்து பல கட்டங்களைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. நேற்று தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டதில் 15, சென்னையில் மட்டும் 10 பாதிப்புகள் என உள்ளன. கரோனா தொற்றால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சிலர் மருத்துவமனைகளில் தனியாக வார்டு இல்லை என கேட்கின்றனர். ஜெஎன் 1 கரோனா தொற்றால் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.

விரைவில் 'தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்' திட்டம்:'மக்களைத் தேடி மருத்துவம்' மூலம் ஒரு கோடியே 67 ஆயிரம் பேர் இதுவரை பயன் பெற்றுள்ளனர். தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்னும் ஒருவார காலத்திற்குள் 'தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்' தொழிலாளர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்வதற்கு தொடங்கப்படும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

Last Updated :Jan 3, 2024, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details