தமிழ்நாடு

tamil nadu

மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை... குஷ்பு சர்ச்சையாக மாறியது எப்படி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 2:26 PM IST

Updated : Nov 23, 2023, 7:10 PM IST

Khushbu controversy twitter: நடிகை குஷ்பு சமூக வலைத்தளப் பக்கத்தில், சேரி மொழி எனக் குறிப்பிட்ட சொல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'சேரி' என்கிற சொல்லிற்குப் பிரஞ்சு மொழியில் அன்பானவர் என்று குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

குஷ்பு சர்ச்சை பதிவு
குஷ்பு சர்ச்சை பதிவு

சென்னை:நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான முறையில் பேசியதற்கு, திரைப் பிரபலங்கள் உட்படப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை பாலியல் ரீதியாகப் பேசுதல் உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (நவ.23) ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து, பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தனது சமூக வலைத்தள பக்கத்தில், த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டு இருந்தார். மேலும், அச்சம்பவம் குறித்தும், தேசிய மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை குறித்தும், பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குத் தொலைப்பேசி மூலம் பேட்டி அளித்து இருந்தார்.

அவர் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. அதற்குப் பல தரப்பட்ட மக்கள் தங்களில் விமர்சனக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். அதில், பெரும்பாலான மக்கள் மணிப்பூர் சம்பவத்திற்கும், டெல்லியில் நடந்த வீராங்கனைகள் போராட்டத்திற்கும் மௌனம் காத்த குஷ்பு, தற்போது, இந்த விவகாரத்தில் முனைப்போடு செயல் படுவதை ஒப்பிட்டு, விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

குஷ்பு பக்கம் திரும்பி சர்ச்சை: அதில் ஒருவர், மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த வன்கொடுமையில் போது குஷ்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தற்போது, நடிகை த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதெல்லாம் அரசியல் லாபத்திற்கான செயல் என்று பதிவிட்டிருந்தார்.

அப்பதிவைக் குறிப்பிட்டு, நடிகை குஷ்பு தனது X சமூக வலைத்தள பக்கத்தில், "ஒரு பெண்ணை இழிவு படுத்த இந்த வார்த்தைகள் தான் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. என்னால் உங்கள் சேரி மொழியைப் பேச முடியாது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்" என்று பதிவிட்டு இருந்தார். மேலும், அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட சமூக வலைத்தள பக்கத்தைக் குறிப்பிட்டு, "இதைப் போன்ற மக்கள் உங்களை அழித்துவிடக் கூடம்" என்று பதிவிட்டு இருந்தார்.

நடிகை குஷ்புவின் அந்தப் பதிவில், "சேரி மொழியை என்னால் பேச முடியாது" என்று குறிப்பிட்டு இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்கி பேசும் வகையிலிருந்ததாக கூறி, நீலம் பண்பாட்டு நிலையம், சிபிஎம் கனகராஜ் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள், தங்களின் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில், குஷ்பு "சேரி மொழி" எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி அவர் கேட்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குஷ்பு தனது X பக்கத்தில் பகிர்ந்த மேலும், ஒரு பதிவில், பலர் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும், தான் பயன்படுத்திய 'சேரி' என்கிற சொல்லிற்குப் பிரஞ்சு மொழியில் அன்பானவர் என்று விளக்கம் அளித்திருந்தார். நடிகை குஷ்புவின் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி விவாதமாக மாறி வருகிறது.

இதையும் படிங்க:த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் - மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

Last Updated : Nov 23, 2023, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details