தமிழ்நாடு

tamil nadu

10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு? ராதாகிருஷ்ணன் புதிய தகவல்

By

Published : Jan 13, 2022, 2:39 PM IST

Updated : Jan 13, 2022, 4:50 PM IST

10 முதல் 12ஆம் வகுப்பு
10 முதல் 12ஆம் வகுப்பு

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இன்று (ஜனவரி 13) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில், "மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் தொற்று அதிகமாக உள்ளது. ஒமைக்ரான் அலையைத் தடுக்க தமிழ்நாடு அரசுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு தொற்று அதிகரித்தாலும் பரிசோதனையைக் குறைக்கவில்லை.

ஒமைக்ரான் வேகமாகப் பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அடுத்த சில நாள்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாகப் பரவும் நிலையில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தால் நோய்ப் பரவலின் தீவிரத்தன்மை குறையும்.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

1 விழுக்காட்டினரே தீவிர சிகிச்சைப் பிரிவில்

ஒமைக்ரானால் நுரையீரல் பாதிப்பு அதிகளவு ஏற்படவில்லை. ஆனாலும் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனையில் 8 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு விழுக்காடு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் நான்கு விழுக்காடு படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் இருக்கின்றனர்.

ஏதாவது ஒரு மருத்துவமனையில் படுக்கை இல்லை என்பதை அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை நிரம்பிவிட்டதாகக் கருத வேண்டாம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குப் பாதிப்பு குறைவாக உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போதுமான அளவு உள்ளது. மேலும் கூடுதல் தடுப்பூசி கோரி மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளோம்.

ஆன்லைன் வகுப்பு - முதலமைச்சருடன் ஆலோசனை

டெல்டா வைரஸ் பாதிப்பின்போது 25-30 விழுக்காடு வரை மருத்துவமனை வசதி தேவைப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பில் 5-10 விழுக்காடு வரைதான் மருத்துவமனை வசதி தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மாணவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்பொழுது தொற்று அதிகரித்துள்ளதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தடுப்பூசியை ஆர்வமாகச் செலுத்திக் கொள்கின்றனர். தற்பொழுது மேலும் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பண்டிகை நாள்களின்போதும், கோயில்களில் மக்கள் கூட்டமாகச் சேர்வதால் ஒமைக்ரான் பரவ வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

நோய்த் தொற்று வல்லுநர்களின் கருத்தின்படி ஒமைக்ரான் பிப்ரவரி மாதம் உச்சத்தை அடைந்து, பின்னர் படிப்படியாகக் குறையும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை முறையாகச் செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய ஆர்.என். ரவி!

Last Updated :Jan 13, 2022, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details