தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதாவின் சந்தேக மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

By

Published : Mar 17, 2023, 10:24 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்தேக மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வேலூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நியமிக்கப்பட்ட நீதிபதி (ஓய்வு) ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களை அரசிடம் அறிக்கையாக குறிப்பிட்டுள்ளது.

அதில், ’ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தற்போதும் பேசப்படுகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்த நிலையில் "மூச்சுத்திணறல்" மட்டுமே முக்கியக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.

முக்கிய நபர்களைத் தவிர, மருத்துவமனை ஊழியர்கள் வரை அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படையாக ஆணையத்திடம் குறிப்பிடவில்லை.

டெல்லியில் இருந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த "எய்ம்ஸ்" மருத்துவர்களுக்கு ஆடம்பரமான செலவுகளில் தங்கும் வசதிகளை தனியார் மருத்துவமனை செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3.50 மணிக்கு உயிரிழந்த ஜெயலலிதாவை மறுநாள் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

மேலும், மருத்துவமனை அறிக்கையில் பல இடங்களில் குழப்பத்தையும், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது குறித்தும், வி.கே.சசிகலா, அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆணையத்தின் அறிக்கையின்படி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை விவரங்கள் மற்றும் மரணம் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையில் பல சந்தேகத்தையும் தெரிவித்துள்ளது.

சசிகலா மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை சிகிச்சை தொடர்பாக அதிகாரிகளுக்கு முழு விவரமும் தெரிந்த போதும் யாரும் இதுவரை வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவமனையால் அமைக்கப்பட்ட 4 மருத்துவர்கள் கொண்ட குழு, ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது? என்ன நோய்க்கான சிகிச்சையை அவர் மேற்கொண்டார்? என்ன உடல் உபாதைகள் உள்ளன? என்பதை தெளிவாக குறிப்பிடாதது மேலும் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.

அதனால், ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாநில கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டால், விசாரணையாக நேர்மையாக இருக்காது என்பதால், நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள்… தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details