தமிழ்நாடு

tamil nadu

தயாநிதி மாறன் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம் மீண்டும் செலுத்தப்பட்டது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 8:30 AM IST

Dayanidhi Maran: திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ.99,999 மீண்டும் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம் மீண்டும் செலுத்தப்பட்டது..ஆக்சிஸ் வங்கி விளக்கம்
தயாநிதி மாறன் (கோப்புப்படம்)

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி ஆகியோரது இணைப்பு வங்கிக் கணக்கிலிருந்து 99,999 ரூபாயை மர்ம நபர்கள் திருடிய நிலையில், மீண்டும் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டதாக ஆக்சிஸ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க எம்.பி மற்றும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,999-ஐ மர்ம நபர்கள் திருடியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “தானும், தனது மனைவியும் கூட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ளோம். இந்நிலையில், மலேசியாவில் இருக்கும் தனது மனைவியை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, வங்கி விபரங்கள் மற்றும் ஏடிஎம் கார்டு எண்களை கேட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, தன் மனைவி வங்கி விபரங்களை தர மறுத்த நிலையில், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.99,999-ஐ சைபர் மோசடி கும்பல் திருடியுள்ளனர். மேலும், தனது மனைவியின் தொலைபேசிக்கு மூன்று முறை தொடர்பு கொண்டு ஓடிபி (OTP) மற்றும் ஏடிஎம் கார்டு விபரங்களை மர்ம நபர்கள் கேட்ட நிலையில், தனது மனைவி அதை தெரிவிக்காத நிலையிலும், வங்கிக் கணக்கிலிருந்து ரூ.99,999 பணம் திருடப்பட்டு இருப்பது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடிய சைபர் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, தயாநிதி மாறன், வங்கி விபரங்களை பெறாமலேயே பணம் திருடப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை, எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஆக்சிஸ் வங்கிக்கும் புகாராக தெரிவித்தார். அதில் டிஜிட்டல் இந்தியாவில், தனிப்பட்ட தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், 75 சதவீதம் இது போன்ற மோசடி நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆக்சிஸ் வங்கி தரப்பிலிருந்து எக்ஸ் தளத்தில், தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.99,999 திரும்ப கிடைத்து விட்டதாகவும், அதனை மீண்டும் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி தரப்பிலிருந்து தயாநிதி மாறன் மனைவிக்கு தொலைபேசி மூலம் எவரும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வங்கி தொடர்பான விபரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும், இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைமில் விசாரணைக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ராஜஸ்தான் தேர்தல் தேதியில் மாற்றம்; முகூர்த்த நாள் என்பதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details