தமிழ்நாடு

tamil nadu

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் - மறுபரிசீலனைக்கு உத்தரவு

By

Published : Sep 24, 2021, 3:04 PM IST

தொலைக்காட்சி சின்னம்
தொலைக்காட்சி சின்னம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் பொதுசின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு

இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.கே. அய்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.24) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முந்தைய மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்படாததால், உள்ளாட்சி தேர்தலில் பொதுசின்னம் ஒதுக்க கூடாது என உள்ளாட்சி தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகளில் கூறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை மனுவை நிராகரித்த உத்தரவை மறுபரிசீலனை செய்து உரிய முடிவை வரும் திங்கட்கிழமை (செப்.27) தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details