உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு

author img

By

Published : Sep 24, 2021, 2:14 PM IST

MHC

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29-க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

செப்டம்பர் 15 முதல் 22ஆம் தேதிவரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அக்டோபர் 16ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகிவிடும்

ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவுத் துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், "மாநிலம் முழுவதும் அல்லாமல் ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்த எந்தக் காரணமும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

மத்திய ரிசர்வ் படையை அமர்த்துக

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், கரோனா விதிகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில், "உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பரப்புரை முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காணொலி பதிவுசெய்ய வேண்டும்.

பறக்கும் படைகளை அமைத்து பணப்பட்டுவாடாவைத் தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மனு அளித்தும் ஆணையத்திடமிருந்து பதில் இல்லை

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது நினைவுகூரத்தக்கது. தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறத் தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்னிலையாகி,

"வெளி மாநிலத் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும், மத்திய காவல் படையைப் பணியமர்த்த வேண்டும். தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவுசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் செப்டம்பர் 14இல் மனு அளித்தும் பதிலளிக்கவில்லை" என வாதிட்டார்.

ஆணையம் அதிமுகவுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் அரசு பிளீடர் பி. முத்துக்குமார் முன்னிலையாகி, 14 ஆயிரத்து 900 வாக்குச்சாவடிகளுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது அவசியம் எனக் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மாநிலத்தில் பிரதான கட்சி என்ற முறையில் அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29-க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.