தமிழ்நாடு

tamil nadu

Exclusive from Birmingham: "சொல்ல வார்த்தையே இல்லை" - தங்கம் வென்ற பின் தமிழ்நாடு வீரர் உவகை!

By

Published : Aug 3, 2022, 4:17 PM IST

Etv Bharat
Etv Bharat

இந்திய டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்றுள்ளது. அந்த அணியில் இடம்பெற்று, தங்கம் வெல்ல முக்கியப் பங்கு வகித்தவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சத்தியன் ஞானசேகரனிடம் ஈடிவி பாரத் ஊடகம் எடுத்த பிரத்யேக நேர்காணல், இதோ...

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரில் நேற்றுடன் ஐந்து நாட்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (ஆக. 3) ஆறாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதுவரை, இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலங்கள் என 13 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு மட்டும் நேற்று இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்த நிலையில், அதில் ஒரு தங்கம் வெல்ல டேபிள் டென்னிஸ் இந்திய ஆடவர் அணியும் முக்கியக்காரணமாகும்.

சிங்கப்பூரை சிதறடித்த இந்தியா: சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிச்சுற்றில் மொத்தம் ஒரு இரட்டையர் பிரிவு போட்டியும், மூன்று ஒற்றையர் பிரிவு போட்டியும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவுப்போட்டியில் சத்தியன் ஞானசேகரன் - ஹர்மீத் தேசாய் ஜோடி, 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மிரட்டியது.

அடுத்து, நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் சிங்கப்பூர் வீரரிடம், இந்திய வீரர் சரத் கமல் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றது. வெற்றியைத் தீர்மானிக்க நடைபெற்ற ஒற்றையர் பிரிவுப் போட்டியில், ஹர்மித் தேசாய் 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை உறுதிசெய்தார்.

புயலுக்குப் பின் அமைதி: இந்நிலையில், தமிழ்நாட்டைச்சேர்ந்தவரும், காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்றவருமான சத்தியனிடம், வெற்றிக்கு சில மணிநேரத்திற்குப் பின் ஈடிவி பாரத் ஊடகம் பிரத்யேகமாக நேர்காணல் செய்தது. அப்போது சத்தியன் ஞானசேகரன்,"எனது உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை" என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் அமைதியானார்.

சத்தியன் ஞானசேகரன்

தொடர்ந்து பேசிய அவர்,"இன்றைய வெற்றி எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. காமன்வெல்த்தில் தொடர்ந்து தங்கத்தை தக்கவைத்தது அற்புதமான ஒன்று. நைஜீரியா, சிங்கப்பூர் ஆகிய அணிகளை வென்று ஆதிக்கம் செலுத்தியது அனைவருக்கும் பெரிய வெற்றியாக அமைந்தது.

2ஆவது தங்கம்...: இது எங்களின் சிறந்த தருணங்களில் ஒன்றாகும். மேலும், இந்திய டேபிஎஸ் டென்னிஸுக்கு காமன்வெல்த் தொடர் என்பது மிக முக்கியமான ஒன்று, குறிப்பாக எங்களின் வெற்றியின் படிக்கட்டு இத்தொடர். காமன்வெல்த் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். எனக்கு இந்த தங்கத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது இரண்டாவது காமன்வெல்த் தங்கம்.

சத்தியன் ஞானசேகரனிடம் ஈடிவி பாரத் ஊடகத்தின் பிரத்யேக நேர்காணல்

இந்த வெற்றி, டேபிள் டென்னிஸைத்தொடர்ந்து விளையாட இந்தியர்கள் பலருக்கும் பெரும் நம்பிக்கையை அளிக்கும். சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்துவது என்பது வருங்காலத்தலைமுறையினருக்கு ஊக்கத்தை அளிக்கும்.

அதிரடியாக விளையாட விரும்புகிறேன்:என் வாழ்வின் சிறந்த ஆட்டங்களை இந்தாண்டு விளையாடி உள்ளேன். அழுத்தமான சூழலையும் என்னால் கையாள முடிகிறது. நாங்கள் முதலில் விளையாடிய இரட்டையர் பிரிவு ஆட்டம் நன்றாக சென்றது. அதற்கடுத்து, நடந்த ஒற்றையர் பிரிவு போட்டி மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.

மிகவும் அழுத்தம் வாய்ந்த போட்டியாக இருந்தாலும், அணியை முன்னிலை பெறச்செய்ய தீவிரமாக விளையாடினேன். என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினேன். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதிரடியாக விளையாடுவதுதான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்வதில் முக்கியமான ஒன்றாக உள்ளது" என்றார்.

மேலும், டேபிள் டென்னிஸ் ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன என்ற கேள்விக்கு,"நான் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுப்பேன். தாயகத்தில் இருந்து எங்களுக்குத்தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:காமன்வெல்த் 2022: ஒரே நாளில் 2 தங்கம்; 2 வெள்ளி

ABOUT THE AUTHOR

...view details