அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் 'கூழாங்கல்'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இன்னும் திரைக்கு வராத இந்தப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று வருகிறது. இந்நிலையில், கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் சிறந்த அயல்நாட்டு திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்கர் கோஸ் டூ...இதை கேட்க இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. நம் வாழ்வில் கனவு நனவாக இன்னும் இரண்டு படிகள் முன்னே உள்ளது" என அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அயல்நாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும். இந்தப்போட்டியில், 'ஷெர்னி', 'சர்தார் உதம்', 'நாயாட்டு', 'மண்டேலா', 'கூழாங்கல்' ஆகிய படங்கள் போட்டியிட்டன'
இந்த படங்களை இயக்குநர் ஷாஜி என் கருண் தலைமையிலான குழு பார்வையிட்டது. அதிலிருந்து 'கூழாங்கல்' திரைப்படம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக 'தெய்வமகன்' (1969), 'நாயகன்' (1987), 'தேவர்மகன்' (1992), 'அஞ்சலி' (1990), 'குருதிபுனல்' (1995), 'ஜீன்ஸ்' (1998), 'ஹேராம்' (2000), 'விசாரணை' (2016) ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களாகும். 'கூழாங்கல்' படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: திரையிடப்படுவதற்கு முன்பே சர்வதேச விருதுகளைக் குவிக்கும் 'கூழாங்கல்'!