லண்டன்: வெளிநாட்டினர் பலர், இங்கிலிஷ் கால்வாயை சிறிய படகுகள் மூலம் கடந்து, பிரிட்டனில் குடியேறுவது தொடர்ந்து வருகிறது. பிரிட்டனின் மான்ஸ்டன் நகரில் உள்ள பழைய விமான நிலையமானது புலம் பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக செயலாக்க மையமாக இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் உள்துறைச்செயலாளர் சுயெல்லா பிரவர்மேன், மான்ஸ்டனில் உள்ள புலம்பெயர்ந்தோருக்களுக்கான செயலாக்க மையத்தில் கடந்த 1ஆம் தேதி ஆய்வுமேற்கொண்டார். அங்கு புலம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, 1,600 பேர் தங்கக்கூடிய இடத்தில் 3,500 பேர் தங்கி இருந்ததைக்கண்டார்.
ஆய்வின்போது பேசிய சுயெல்லா, புலம்பெயர்ந்த மக்களின் வருகையைப் பிரிட்டன் தெற்கு கடற்கரை மீதான அத்துமீறிய படையெடுப்பு என்று கூறினார். அதோடு பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் குறிப்பிட்டார். இவர்களை அகதிகள் எனக்கூற வேண்டாம் என்றும், அவர்களில் பலர் குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார்.