ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையம் அருகே ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேரும் அடக்கம். இச்சம்பவத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் கண்டனம்
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரின் துயரில் ஐநா பங்கேற்கிறது. ஆப்கானிஸ்தான் எப்படிப்பட்ட மோசமான சூழலில் உள்ளது என்பதற்கு இச்சம்பவம் உதாரணம்.
இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் துணைநிற்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்" என்றார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், தாலிபான் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து காபூலில் உள்ள வெளிநாட்டவர்களை மீட்கும் பணிகளை சர்வதேச நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.
விமான நிலையத்தில் குண்டுவெடிக்க வாய்ப்புள்ளது என உளவுத் துறை தகவல்கள் இரு நாள்களாகப் பரவிவந்த நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காபூல் குண்டுவெடிப்பு: நான்கு இடங்களில் தாக்குதல் - 90 பேர் உயிரிழப்பு