தமிழ்நாடு

tamil nadu

தொழிலாளர்களிடம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு!

By

Published : May 26, 2020, 12:43 PM IST

Updated : May 26, 2020, 2:46 PM IST

ஜெனீவா: கோவிட் -19 பெருந்தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து வேலைகளுக்குத் திரும்பும் தொழிலாளர்களிடம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து புதிய வழிகாட்டுதல்களைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) வெளியிட்டுள்ளது.

ILO suggests 'human-centric' approach for employees returning to work
தொழிலாளர்களிடம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அச்சுறுத்தும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்க உலகெங்கிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் உலகத் தொழிலாளர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது ஐ.நா. சபையின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு.

அந்த வகையில் இந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா ஊரடங்கு நெருக்கடி தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதுமுள்ள 330 கோடி தொழிலாளர்களின் வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்துவருகிறது. அதன்படி,

  • ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் 80 விழுக்காடு,
  • ஐரோப்பா, மத்திய ஆசியாவில் 70 விழுக்காடு,
  • ஆசியாவில் 21.6 விழுக்காடு

அளவிற்கு தொழிலாளர்கள் தங்களது வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

சில்லறை வணிகம், உற்பத்தி போன்ற துறைகளில் 43 கோடி நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. தொழிலாளர்களையும், சிறு நிறுவனங்களையும் காக்க துரித நடவடிக்கைகள் அவசியம்.

ஊரடங்கில் தளர்வளிக்கத் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய மீண்டும் தொழில்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

அப்படி பணிக்குத் திரும்பும் தொழிலாளர்களிடம் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள்:

  • பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தும்போது அது தங்குதடையின்றித் தொடர, பணியிடங்களில் தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பை உணரும் வகையில் வழிவகை செய்துதர வேண்டும்.
  • கோவிட்-19 பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சங்களுக்கு அவர்கள் உள்ளாகாமல் இருக்க வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • வருமானமின்மை, உணவின்மை, பாதுகாப்பற்ற நிலை, சேமிக்க இயலாத நிலை, கடன் வாங்கும் சூழல் ஆகியவை ஏற்படாத வகையில் பொருளாதார நடவடிக்கைளை மேற்கொள்ள மீண்டும்.
  • பணியாற்றவரும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும்; அதற்கான சூழலை உருவாக்கித் தர நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும்.
  • பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலகை மீட்க தொழில் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் தேவையற்ற இடர்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
  • புதிய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென கோரும் அதே நேரத்தில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் உடல்நலத்தையும் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வயதானோர், கர்ப்பிணிகள், அகதிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள், முறைசாரா தொழில் துறையில் உள்ள தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நிலைமையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
  • பணிக்குத் திரும்புபவர்களின் பாலினம், சுகாதார நிலை தொடர்பான பாகுபாட்டை உருவாக்காது என்பதை உறுதிப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரான முறையில் மீட்டெடுக்க, தொழிலாளர்கள் கொடிய தீநுண்மியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் புதிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இதில் சமூக உரையாடல் குறிப்பாக முக்கியமானதாக இருக்கும். ஏனெனில், இது புதிய தகவல்களையும், நிர்வாகத்தின் பார்வைகளையும் கடத்துவதற்கான மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.

வீட்டிலிருந்தபடி பணியைச் செய்ய அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு சில விஷயங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

தொற்று பரவலை ஏற்படுத்தும் நேரடி சந்திப்புகளுக்கு பதிலாக காணொலி வாயிலாகக் கூட்டங்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஏற்றாற்போல மாறுபடும். இருப்பினும், எல்லா இடங்களிலும் தூய்மைப் பணிகள், சுகாதார நடைமுறைகளுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட வேண்டும்.

காற்றோட்டமான பணிச்சூழலை அளிப்பது, தொழிலாளர்கள் நெரிசலைக் குறைக்கும் நெகிழ்வான பணிநேரங்களை வகுத்து தருவது போன்ற ஏற்பாடுகளைச் செய்து தரலாம்.

பணியிட இடர் மதிப்பீட்டிற்கான ஐந்து படிநிலை அணுகுமுறையை இது அறிவுறுத்துகிறது. அவையாவன:

  1. ஆபத்துகளை அடையாளம் காணுதல்.
  2. அது யாருக்கு, எப்படி, எவ்வாறு தீங்கு விளைவிக்கும்? என்பதை அறிதல்.
  3. ஆபத்தை மதிப்பீடு செய்து பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து முடிவுசெய்தல்.
  4. எந்த இடர் கட்டுப்பாட்டு நடவடிக்கையை, யார் செயல்படுத்துவது என்று முடிவெடுத்தல்.
  5. கண்டறிந்தவைகளைப் பதிவுசெய்து, இடர் மதிப்பீட்டைக் கண்காணித்து மறுபரிசீலனை செய்து, தேவைப்படும்போது புதுப்பித்து நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :80 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம்!

Last Updated : May 26, 2020, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details