தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக நெசப்பாக்கம் பகுதியில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி வந்திருக்கிறார். நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள தனியார் எடிட்டிங் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது இறப்பிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இவர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ஷாந்தனு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், “ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன். நல்ல திறமையுள்ள உதவி இயக்குநர். 26 வயது தான் ஆகிறது எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லை, ஆரோக்யாமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார், ஆனால் கடவுள் அவரை நிறையச் சீக்கிரமாக எடுத்துக்கொண்டார். பணிபுரியும் போது கீழே அப்படியே இறந்திருக்கிறார்.
வாழ்க்கை நிலையற்றது. அவனைக் காப்பாற்ற எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. கொடுமை என்னவென்றால் அவன் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எனக்கு போன் செய்திருக்கிறார் நான் எடுக்கவில்லை, எடுத்திருந்திருக்கலாம். அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது. எனவே வெறுப்பை விட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க முயற்சிப்போம். மன அழுத்தம் தான் உலகின் மிகப்பெரிய எதிரி. அதனை விட்டு வெளியே வாருங்கள்.
உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் யாரிடமாவது மனம் விட்டு பேசுங்கள், தனியாக அதனை எதிர்கொள்ள முயற்சிக்காதீர்கள் தின்றுவிடும். ‘என்ன சார் இந்த உலகத்தில் இருக்கு.. அவ்வளவோ வெறுப்பு.. எதிர்மறைகள்.... சந்தோஷமாக இருங்கள்... அன்பை பரப்புங்கள்’ என அடிக்கடி என்னிடம் கூறுவான்” என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க:திரைப்பட நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்