தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: பெருந்துறை அருகே துயரம்!

By

Published : Feb 2, 2022, 9:10 AM IST

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

பெருந்துறை அருகே குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ஈரோடு: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சகாயசெல்வி, இவர்களது குழந்தைகள் வினில் குமார் (4), மாளவிகா (1). இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மேட்டுபுதூர் பகுதியில் வசித்துவருகிறார்.

இந்தத் தம்பதி, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்குமிடையே குடும்பச் செலவு சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 1) காலை ரமேஷ் வேலைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுள்ளார். அப்போது சகாயசெல்வி, தனக்கு வயிற்றுவலி இருப்பதாகவும் ஸ்ப்ரைட் வாங்கப் பணம் வேண்டும் என்றும் ரமேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ரமேஷ் பணம் கொடுக்காமல் வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகாயசெல்வி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.

அப்பகுதியில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள 60 அடி கிணறு அருகே சென்ற சகாயசெல்வி, திடீரென தனது இரண்டு குழந்தைகளை கிணற்றுக்குள் வீசிவிட்டு தானும் குதித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தக் கிணற்றில் தற்போது 35 அடி ஆழத்திற்கு நீர் இருந்தது. கிணற்றில் குதித்த சகாயசெல்வி மட்டும் படிக்கட்டில் ஏறி அமர்ந்துகொண்டார். ஆனால் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து முதலில் குழந்தை மாளவிகா உடலை மேலே எடுத்தனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வினில்குமார் உடலை மீட்டனர்.

குழந்தைகள் உடல், பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. அதே மருத்துமனைக்கு தாய் சகாய செல்வியையும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இது குறித்து பெருந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details